Saturday, December 26, 2009

எக்காலம்

ஒளிந்து கொண்டிருக்கும்
கவிதைக்குள்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கும்
கவிதை
கண்டெடுப்பது
எக்காலம்

விட்டுச் செல்லுதல்

தின்று முடித்த கையில்
முளைத்திருந்தது
பழம் விட்டுச் சென்ற
மரம்

Friday, December 25, 2009

நீந்துதல்

வண்ணங்களில்
நீந்துகிறது
சிறுமி வரைந்த மீன்

Saturday, December 19, 2009

மன்னிப்பு

புன்னகைத்து
மன்னிப்பு கேட்கிறாய்
தாமதமாய்
வந்ததற்காக

என்னால்
முடியும்

காத்திருந்து
போன காலம்
மன்னிக்குமா
தெரியவில்லை

கரையில்

கடலில்
மெளனங்களை
கரைத்துவிட்டு
உட்கார்ந்தோம்

கரை ஒதுங்கிய
நுரை இரண்டில்
உன் பெயரும்
என் பெயரும்

Friday, December 18, 2009

ஒளி

ஒளி
துளைப்
போட
கரையும் மெழுகு
கரையும்
அகத்தினுள்
புகுந்து
உள் கரைந்து
ஒளிப்போயடையும்
பிரபஞ்சத்திடம்

வழி

வழிப்போக்கனிடம்
விலாசத்தைக் கேட்டேன்
கொடுத்துவிட்டுப் போனான்
வழியை

இன்றும் நானும்

இன்று
நான்
எதுவும்
எழுத இல்லை

இன்றும்
என்னை
எழுத
வைக்கவில்லை

இன்றும் நானும்
மொழியற்று
எழுத்தற்று
எதுவுமற்று

Tuesday, December 15, 2009

விளையாட்டு

அலையோடு
விளையாடும்
குழந்தை

குழந்தையோடு
விளையாடும்
கடல்

இது

எங்களோடு
வசிக்கும் பறவைக்கு
இது கூடு

பறவையோடு
வசிக்கும் எங்களுக்கு
இது வீடு

Sunday, December 13, 2009

வா

கீழிருந்து
வானத்தைப்
பார்த்தது போதும்
வானத்திலிருந்தே
வானத்தைப்
பார்க்கலாம்
வா

Friday, December 11, 2009

சுவரில்

பூச்சியைத் தேடும்
பல்லியைப் போல்
சுவரில்
நிழலாடும்
தூக்குக் கயிறு

எதுவும்

நீயாய்
எதுவும்
தரவில்லை
ஆனாலும்
எவ்வளவு
முத்தங்களைச்
சேர்த்து வைத்திருக்கிறேன்
தெரியமா?

அவள்

அகப்பட்டுக்கொண்ட
விலைமாது
நீதிமன்றத்தில் கத்தினாள்
என் தவறில்
தவறில்லை

ஏன்

ஏன் கோபப்படுகிறீர்கள்
என்கிறார்
கோபப்பட வைத்தவர்

கதவுகள்

கதவுகள்
மூடிக் கொண்டன
உலகம்
திறந்திருக்கிறது

Wednesday, December 9, 2009

முன்கணம்

எழுதுவதற்கு
முன்கணம் வரை
கேட்டுப்போகாமல் இருந்தது
இந்தக் கவிதை

கேள்விகள்

என்னைக் கேள்விகள்
கேட்டுக் கொண்டே
இருந்தீர்கள்
கேள்விகளுக்குள்
நுழைந்து போய்
பார்த்த போது
உள்ளீடற்ற உங்கள்
உருவம் தெரிந்தது
ஒரு புன்முறுவலோடு
வெளியே வந்து
பார்க்க
நீங்கள் இருந்த இடத்தில்
எறும்பு அளவுக்கு ஒரு
கேள்வி இருந்தது
துடித்தபடி

யாரும்

புகைப்பட கலைஞனின்
புன்னகையைப் போல
புகைப்படத்தில்
இருந்த யாரும்
புன்னகைக்கவே இல்லை

நீண்ட நாட்கள்

நீண்ட நாட்களாய்
நாம் சந்திக்கவே இல்லை
நீண்ட
நாட்களும்
திரும்பவே இல்லை

ஞாபகக் குவியல்

இது எல்லாமே
உன் ஞாபகக் குவியல்
நீ ஒன்றை
கலைத்துப் போட்டாலும்
மொத்த சரடும்
அறுந்து விடும்

Tuesday, December 1, 2009

இல்லாத கோப்பை

இல்லாத கோப்பையிலும்
நிரப்பப் பழகுகிறேன்

வேண்டும்
காலத்தின் தாகத்திற்கும்
எனக்கும்

நம்மவன்

துடைக்க மனமின்றி
உன் கண்ணீரை
இந்த பாட்டிலில்
நிரப்பிக்கொள் என்று
தருபவனிடமிருந்து வாங்கி
அதை உடைத்து
அவன் முகத்தைக் கீறி
சிந்தும் ரத்தத்தை
உன் கைகளில்
ஏந்திக்கொள்
எனச் சொல்லிவிட்டுப் போகிறவன்
சொரணை இழக்காத நம்மவன்

புத்திசாலி

அதை
புத்திசாலி மீன் என்று
ஒத்துக் கொண்டேன்
வாயைத் திறந்து
தின்று கொண்டிருந்த
தூண்டிலைக் காட்டியபோது

Saturday, November 28, 2009

நிற்கவில்லை

ஓடுவது நிற்கவில்லை
எனக்குள்
ஓடுவதும்

வந்தவள்

தாகத்திற்க்கு
நீர் அள்ள வந்தவள்
பருகிக் கொண்டிருக்கிறாள்
கிணற்றில்
ஒளிரும் நிலவை

Wednesday, November 25, 2009

நொடியில்

உடைத்துப் பார்த்த நொடியில்
விரிந்து கிடக்கும்
காலம்

Tuesday, November 24, 2009

இரண்டு கதைகள்

இரண்டு கதைகள் இருக்கிறது
ஒன்று
கண்ணீரை வரச்செய்யும்
இன்னொன்று
சிரிப்பை வரச்செய்யும்
எந்த கதை
உங்களுக்கு வேண்டும்

எனக்கு வேண்டும்
கண்ணீரை நிறுத்தி
சிரிப்பை தொடரச்
செய்யும் கதை

ஞாபக தானியங்கள்

தனிமை
ஞாபக தானியங்களைத்
தின்கிறது
நான் பசியோடு
உன் வருகை பார்த்து

Saturday, November 21, 2009

ஆனாலும்...

மெதுவாகத்தான் போகிறது
ஆனாலும் நிற்கவில்லை
அந்த ஆமை

தேநீர் உரையாடல்

தேநீர் அருந்திய
நேரத்துக்குள்
பேசி முடித்தோம்

நம் உரையாடலில்
இருந்தன
இன்னும் தேநீருக்கான
நேரங்கள்

Wednesday, November 18, 2009

தூரம்

அருகில் இருக்கிறோம்
பார்க்க மறுக்கும் மனம்
தூரம் பார்க்கிறது

நினைவில்

ஆணுறை
வாங்கிக் கொள்ளலாம்
கூப்பிட்டால்
வந்து விடுவாள்
நினைவில் புன்னகைக்கும்
மனைவியைத் தவிர்த்து
எப்படிப் போக

Saturday, November 14, 2009

உங்களுக்கு

உங்கள் துப்பாக்கிக் குறிகளில்
இன்று எங்கள்
உயிர்கள் வீழும்
நாளை எங்கள்
விடுதலை வாழும்

சருகு

இந்த இடத்தில்
உதிர்ந்து கிடக்கும் சருகு
உயிர்த்தெழுந்து
மரமாகி
இடத்தை அடைக்கிறது
விழவிடாத
சருகுகளோடு காற்றில்
உரையாடுகிறது
மகிழ்கிறது
மீண்டும் சருகாகி
நிகழ்ந்ததை
நினைத்துப் பார்க்கிறது
காற்றில் படபடக்கிறது
கால்பட்டு
இறந்து போகிறது

பேசுதல்

நான் அபத்தமாக
பேசியதாக
சொன்ன நண்பர்
அதையே
பேசிக்கொண்டிருந்தார்
இன்னும் அபத்தமாக

உணர்தல்

கவிதையில் ஓடியது நதி
விரல்கள் உணர
கையில் துள்ளின வார்த்தைகள்

Monday, November 9, 2009

குளிரில்

குளிரில்
இறந்து போனவனின்
உடலில்
நடுங்கிக் கொண்டிருந்தது
குளிர்

வடு

தடவும் போதெல்லாம்
வலியைத் தருகிறது
பிரிவின் வடு

Sunday, November 8, 2009

இறந்துபோனவர்களின் நகரம்

எல்லோரும்
இறந்துபோன நகரத்தில்
சுற்றிக் கொண்டிருக்கிறேன்

மரண வாசனை
நின்றபாடில்லை

நீ எப்போது
இறந்து போவாய்
காலடியில் தட்டுப்பட்ட
ஒரு உடல் கேட்கிறது

நடுங்கச் செய்கின்றன
சாவின் பிம்பங்கள்
முடியாத அழுகுரல்களும்

தோள் வந்து அமரும்
பச்சைக்கிளி புன்னகைத்து
ஓடிப் போனது

எல்லோரும்
இறந்துபோன நகரத்திலிருந்து
வெளியேறிக் கொண்டிருந்தேன்
மரணத்தைப்
போட்டு விட்டு

Saturday, November 7, 2009

பிடிக்கும்

சத்தம் பிடிக்கும்
அமைதியிலிருந்து
தெறிக்கும் சத்தம்
அதிகம் பிடிக்கும்

பரிசு

உன் கண்களில்
எடுத்து வந்திருக்கிறாய்
எனக்கான பரிசை

எப்படி வாங்கிக் கொள்வது
எனக்குத் தெரியவில்லை

Monday, November 2, 2009

நிழலில்

கோயில் நிழலில்
உட்கார்ந்து செல்கிறார்
கடவுள் மறுப்பு
சிந்தனையாளர்

நீயும் மழையும்

நீ இருக்கும்போது
பெய்யும் மழை
எழுதாத கவிதை

நீ இல்லாதபோது
பெய்யும் மழை
எழுத வைக்கும் கவிதை

Sunday, November 1, 2009

நீ ஓடு

தேங்கிக் கிடந்த
கனவொன்று
சத்தம் போட்டது
நீ ஓடு
நான் நதியாய்
ஓட

சாலை

யார் துணையுமின்றி
அடர்த்தியாய் வாகனங்கள்
செல்லும் சாலையை
லாவகமாய்
கடந்து முடித்த மூதாட்டி
அங்கிருந்து கூப்பிடுகிறாள்
பயப்படாமல்
வரச்சொல்லி அவளை

Saturday, October 31, 2009

உனது பதிலில்...

நீ கண்ணீரை மட்டும்
வரைந்தாய்

இது
எந்த கண்களின் கண்ணீர்
கேட்டேன்

சிரித்தபடியே சொன்னாய்
கண்கள் இருந்தால்தான்
கண்ணீர் வர வேண்டுமா

குழந்தையிடமிருந்து...

குழந்தையின் உதட்டில்
சிரிக்கிறது சொர்க்கம்
குழந்தையின் கண்களில்
வழிகிறது பிரபஞ்சம்

Sunday, October 25, 2009

எவ்வளவோ தெரியுது

அப்பாவும் மகனும்
பார்த்துக் கொண்டிருந்தனர்

தந்தை திரும்ப திரும்ப
சொன்னார்
இங்கிருந்து பார் என்று

ஆச்சர்யத்தை நிறுத்தி
அப்பா சொன்னபடி செய்தான்

பிறகு சொன்னான்

அப்பா நீங்க சொன்னபடி பாத்தா
எனக்கு நீங்கதான் தெரியிறீங்க
என்படி பாத்தா
எவ்வளவோ தெரியுது

Friday, October 23, 2009

கேட்க முடியும்

நீங்கள்
ரத்தத்தை மட்டுமே
வரைந்து பார்க்கும் போது
துளிகளின் துல்லியத்தில்
உங்களால்
கேட்க முடியும்
மரணத்தின் குரலையும்

ஒன்றுமில்லை

வியப்பதற்கு எதுவுமில்லை
வியந்தபின்
உவப்பதற்கு
ஒன்றுமில்லை

தெரியவில்லை

எனக்குத் தெரியவில்லை
என்பது
எனக்குத்
தெரியவில்லை

Saturday, October 17, 2009

விழுதல்

கிளை பிடித்து
தொங்குகிறீர்கள்
விழ மாட்டீர்கள்

பயம் பிடித்து
தொங்குகிறீர்கள்
விழுந்து விடுவீர்கள்

பார்வைகள்

பார்வை இல்லாதவன் என்று
என்னைச் சொல்லாதீர்கள்
நான் அன்பால்
அனைத்தையும் பார்ப்பவன்

Wednesday, October 14, 2009

பொட்டு

கண்ணாடியில்
நீ மறந்து போயிருக்கும் பொட்டு

நான் பார்க்கும் போதெல்லாம்
மாறுகிறது வானவில்லாய்

Saturday, October 10, 2009

மற்றும் பலர்

அந்த படத்தில் நடித்த
மற்றும் பலரில்
நானும் ஒருவன் என்றார்
இடைவேளையில்
தேநீர் அருந்திய ஒருவர்
மற்றவரிடம்

கடவுளின் முகம்

வண்ணங்களிலேயே
இருக்கிறது என் முகம்
வரைய வேண்டாம்
என்கிறார் கடவுள்

Wednesday, October 7, 2009

மலையிலிருந்து...

மலையிலிருந்து
இறங்கியபோது
என் கையில்
கவிதை இருந்தது
கவிதையின் கையில்
மலை இருந்தது

Monday, October 5, 2009

திரி

உன் பிரிவுச்
சுடரில் எரிகிறது
என் நினைவுத் திரி

Friday, October 2, 2009

காளீ

குழந்தையிடமிருந்து திரும்பி
தன் பக்கம்
படுக்கச் சொல்கிறான் கணவன்

தன் பக்கம்
இழுக்கிறது குழந்தை

நடுநிசியை முகர்ந்தபடி
இரண்டுமாகிறாள்
காளீ

Sunday, September 27, 2009

திசை

பிரய்லி எழுத்துக்களில்
ஊர்ந்து போகிறது எரும்பு
தன் திசையைப் பார்த்தபடி

எல்லோரும் எழுதும் கவிதை

எல்லாவற்றையும்
உன் மெளனத்தில்
மொழிபெயர்கிறாய்

உன் மெளனத்தை எதில்
மொழிபெயர்ப்பாய்

மற்றொருவன்

நாளை வரை காத்திரு
என்றான் ஒருவன்

இன்றிலேயே
என் நாளையைப் பார்க்கிறேன்
சொன்னான் மற்றொருவன்

Tuesday, September 22, 2009

பார்க்காமல் போகிறீர்கள்

உங்கள் காலடியில்
ஒரு பென்சில் கிடக்கிறது
பார்க்காமல் போகிறீர்கள்

உங்கள் காலடியில்
ஒரு சாக்லெட் கிடக்கிறது
பார்க்காமல் போகிறீர்கள்

உங்கள் காலடியில்
ஒரு முகவரி
ஒரு வானவில்
ஒரு மலர்
பார்க்காமல் போகிறீர்கள்

உங்கள் காலடியில்
ஒரு பாதை
ஒரு கவிதை
ஒரு வானம்
ஒரு உயிர்
எதையும்
பார்க்காமல் போகிறீர்கள்

உங்கள் காலடியில்
நீங்கள் கிடக்கிறீர்கள்
பார்க்காமல் போகிறீர்கள்

Sunday, September 20, 2009

கனவிலும்...

ஓடிக்கொண்டிருப்பவன்
ஓடிக்கொண்டிருக்கிறான்
கனவிலும்

சதுரங்க வார்த்தைகள்

இந்த முறையும்
நம் உரையாடல் முடியும் தருவாயில்
உன் ஒரு புதிர்

என்னால் அவிழ்க்க முடியவில்லை

நீ ஆழமாகப் பார்க்கிறாய்

கேட்க வேண்டாம் என்று கிளம்புகிறேன்

தூறல் என் பதட்டத்தைக் குறைக்கிறது

உன் புதிரை ஆராய விரும்பவில்லை

புதிருக்குள் ஓடிப்போய்
எதையும் கண்டெடுக்கத் தீவிரப்படவில்லை

சிலவற்றைத் தெரிந்து கொள்ளாமல்
இருப்பதே நல்லது

உன் சதுரங்க வார்த்தைகளில்
நாளையும் விளையாடுவாய்

வேறு புதிர்களோடு முடிப்பாய்

நம் நட்பு இன்னும் சாத்தியப்படலாம்

நீயே புதிராக ஆகாதவரை

இமைக்கும் நேரத்தில்

கண் இமைக்கும் நேரத்தில்
உன்னைப் பற்றி
எழுத வைக்கிறாய்
கண் இமைக்காமல் அதை
நீண்ட நேரம்
படிக்க வைக்கிறாய்

Saturday, September 19, 2009

உனக்குத் தெரியாமல்

வரத்துடித்த
நொடி உணர்ந்து
சமாளித்து
உன்முன்
புன்னகை செய்து
எதையோ எடுப்பதுபோல்
சற்றுத் தள்ளிப்போய்
துடைக்கிறேன் கண்ணீரை
உனக்குத் தெரியாமல்

துடைத்த கண்ணீரிலிருந்து
பார்க்கின்றன
உன் விழிகள்
என்ன சொல்வதென்று
தெரியாமல்

குழந்தைகள்

கை நீட்டிச் சேமிக்கிறது
குழந்தையின் கையில்
குழந்தை மழை
---
பூக்களைக் கிள்ளி எறிகிறது குழந்தை
அம்மா பார்த்துத் திட்டுகிறாள்
பூப்போல் சிரிக்கிறது குழந்தை
---
அம்மாவின் புடவைக்குள்
ஒளிந்து கொண்ட குழந்தை
பேசிப்பார்க்கிறது
அம்மாவைப்போல
---

Tuesday, September 15, 2009

இருளின் சுகம்

மொத்தமாய் இருள்

பிரித்து பிரித்து வைத்து
கடக்க ஆரம்பித்தேன்

இடையிடையே
வந்து போனது வெளிச்சம்

இருளின் சுகத்தை
உணர்ந்து நடந்தன கால்கள்

ஒத்திகைக் குறத்தி

அரங்கேற்றம்
செய்யச் சொல்லி
அவசரப்படுத்தி
மேடையை நோக்கித்
தள்ளி விடுகிறாள்
ஒத்திகைக் குறத்தி

Saturday, September 12, 2009

பயணத்தில்

விடைபெற்று கிளம்பினேன்
அம்மாவின் கண்ணீர்
வழிந்துகொண்டிருந்தது
பயணத்தில்

Friday, September 11, 2009

இந்த தருணங்கள்

நீ இறங்கி விடுவாயோ
என்ற பதட்டதிலேயே
நீ இருக்கும் இந்த தருணங்களை
இழந்து கொண்டிருக்கிறேன்

Wednesday, September 9, 2009

கண்ணாடி வண்ணத்துப்பூச்சி

கண்ணாடி வண்ணத்துப்பூச்சி
பறக்கிறது கம்யூட்டரிலிருந்து
ஈமெயில்களைக் கொறித்தபடி

Tuesday, September 8, 2009

குழந்தையின் பொம்மை

மறந்து வந்த குழந்தை
அம்மாவிடம் கவலைப்படுகிறது
வீட்டில் தனியாக
விட்டு வந்த பொம்மைப் பற்றி

பனித்துளி

இறந்து கொண்டிருக்கும் பனித்துளி
செத்துப் போக மாட்டேன் என்கிறது
கவிதையில்

Friday, September 4, 2009

தாலாட்டு

மழையில் நனைந்து வந்த குழந்தை
தூங்கியது
மழையின் தாலாட்டில்

Monday, August 31, 2009

வெள்ளைக் காகிதம்

நீ எதுவும் எழுதாமல்
அனுப்பி இருக்கும்
வெள்ளைக் காகிதத்தில்
என்னைப் பார்த்து
புன்னகைக்கும் உன் முகம்
குறும்புடன்

Sunday, August 30, 2009

ஓடு

ஓடுவது உனக்குப் பிடிக்கிறதா
கால்களிடம் கேட்டேன்
நிற்கும் போது ஓடுவதைப் பற்றி
யோசிப்பதும் பிடிக்கும் என்றது

Thursday, August 27, 2009

உனக்கு

என் விரல்களுக்கு
நீ தந்த முத்தம்
ஊர்ந்து போகிறது
உதட்டுக்கு

Wednesday, August 26, 2009

எண்ணிக்கை

விதவிதமான போதைகளை
எண்ணிக் கொண்டிருக்கிறான்
பீர்பாட்டில் பொறுக்குபவன்

இந்த கவிதை

இந்த கவிதையை
நான் எழுதாவிட்டாலும்
அது இருக்கும்
உங்கள் இசையில் ஒரு பாட்டாக
அவர் வண்ணத்தில் ஒரு ஓவியமாக
இவர் நடனத்தில் ஒரு அசைவாக
மற்றும் பலவாக

என் மெளனத்தில்
இன்னும் நிசப்தமாக

நான்கு கவிதைகள்

வண்ணங்கள் புன்னகைக்க
அழும் பெண் ஓவியத்தில்
கண்ணீரைத் தீட்டும் கலைஞன்
----
நீந்தத் தெரியாதவன்
பார்த்தபடி
நதி நீந்துவதை
---
இருட்டை உண்டு
கொழுக்கும் பயம்
கைப்பற்றப் பார்க்கும் பகலையும்
---
மரத்திலிருந்து
உதிர்கிறது பூ
மரத்தை சுமந்தபடி
---

Monday, August 24, 2009

பேருந்தில்...

ஓடும் பேருந்தில்
நேரெதிரில் அமர்ந்திருக்கும்
பெண்ணுக்கும் அவனுக்கும்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
இன்னொரு பயணம்

Thursday, August 20, 2009

பெயர்

பள்ளி விட்டு நீண்ட தூரம்
நடந்து வந்த சிறுவன்
நின்றிருக்கும்
தூசிப் படிந்த காரில்
எழுதிப் பார்க்கிறான்
தன் பெயரை

நடந்தும் கடந்தும்

நடந்து நடந்து போனாலும்
குறைவதில்லை தூரம்

கடந்து கடந்து முடித்தாலும்
முடிவதில்லை பயணம்

கேள்

முதுமைப் பற்றி எழுத
தாத்தாவிடம் குறிப்புகள்
கேட்டான் பேரன்
யாராவது முதியவர்களிடம் கேள்
சொல்லியபடியே
வேகமானர் அவர்

தூசி

வண்ணங்களில்
புகுந்து மீண்டவன் முழுதும்
ஓவியங்களின் தூசி

Sunday, August 16, 2009

பொம்மை

முப்பது வருடங்களுக்கு முன்
நான் உடைத்த
பொம்மையின் ஒரு பகுதியை
இன்னும் பாதுகாத்து வருகிறாள் அம்மா
ஒரு பொம்மையைப் போல

போதும்

விடை பெறும் போது
உங்கள் பெயர்
கேட்க நினைத்தேன்
புன்னகைத்தீர்கள்
இதுவே எனக்கு
போதுமானதாக இருந்தது

தெரியும்...

உங்களுக்கு
என்ன தெரியும்

எனக்கு ஒன்றும் தெரியாது
என்பது தெரியும்

Saturday, August 15, 2009

கிருஷ்ண ஜெயந்தி

எல்லா பிளாட்டிலும்
கிருஷ்ணரின் காலடித் தடங்கள்
எந்த வீட்டிற்கு
வந்து போனார் எனத்
தெரியவில்லை

Thursday, August 6, 2009

சுழன்றபடி

எழுதி முடித்த கவிதைக்கும்
எனக்கும் இடையில்
சுழன்றபடி
எழுதப்படாத கவிதைகள்

துளி

உன் பார்வையின்
ஒரு துளியை
பருகத் தொடங்குகிறேன்
இனிக்கும் நாள் இனி

Monday, August 3, 2009

வண்ணங்களை பூசிய குழந்தை
அங்குமிங்கும் ஓடி
ஓவியமாக்கியது வீட்டை

Thursday, July 30, 2009

குழந்தைகள்

பூங்காவில் மொத்தம்
ஏழு குழந்தைகள் விளையாடினர்
என் பால்யத்தையும்
சேர்த்து எட்டு

பயங்கள்

ஒவ்வொரு பயமாக
தொலைத்துக் கொண்டிருக்கிறேன்
பயமாக இருக்கிறது
வேறு பயங்கள்
சேர்ந்து விடுமோ என்று
பொம்மைகளை விற்கும் போதெல்லாம்
குழந்தையாகி விடுகிறார்
கடைக்காரரும்
ஒரு கவிதையில்
வைத்துப் பார்க்க வேண்டும்
பேருந்தில் தரிசித்த
குழந்தையின் புன்னகையை

Sunday, July 26, 2009

சிறுமியின் ஊர்தி

ரயில் வரைந்த காகிதத்தில்
கப்பல் செய்த சிறுமி
மழை நீரில் விட்டு
எல்லோருக்கும் காட்டி
சந்தோஷத்துடன் சொல்கிறாள்
ரயில் கப்பல்ல போவுது

கரும்பலகை எண்கள்

கணக்கு வாத்தியார் பரமசிவம்
இறந்து போனார்
மாணவர்களோடு
அஞ்சலி செய்யும்
கரும்பலகை எண்கள்

Saturday, July 25, 2009

வந்து போகும்…

ஓடாத மின்விசிறி
அசைந்தபடி
தொங்கும் கயிறு
இப்படி ஒரு கனவு
வந்து போகிறது
சீக்கிரம் கனவை
தூக்கிலிட வேண்டும்

Thursday, July 23, 2009

இன்னொரு எண்ணம்

எங்கோ என்னை
இழுத்துப் போய்
விட்டுப் போன
எண்ணத்திடம் கேட்டேன்
எப்படித் திரும்புவது
இரு இன்னொரு எண்ணம்
வரும் என்றது
இருள் தரையில்
விழாமல் சுழல்கிறது
ஒளி பம்பரம்

அம்மா

பார்த்துப் பார்த்து
சமைத்துப் போடுகிறாள் அம்மா
அம்மாவைப் பார்த்துக்கொள்கிறது
சமையலறை

Wednesday, July 22, 2009

புறாக்கள்

எங்களுக்கெல்லாம் வராத புறாக்கள்
தாத்தாவுக்கு மட்டும்
ஓடி வரும்
அருகில் வந்து தின்னும்
நாங்கள் கேட்டபோது
சொன்னார் தாத்தா
அடுத்த முறை தானியத்தில்
அன்பைத் தடவி
போட்டுப் பாருங்கள் என்று

Tuesday, July 21, 2009

முகவரி

நதியிடம் முகவரி கேட்டேன்
வழியெல்லாம் என் விலாசம்தான்
படித்துக் கொண்டே வா என்றது

Saturday, July 18, 2009

நாம் காதலுக்கு வெளியே
சந்தித்துக் கொண்டோம்
பின் காதலுக்குள்ளே பேசியதை
பேச ஆரம்பித்தோம்

Monday, July 13, 2009

கடைசி வரை

கடைசி வரை
கண்ணாடி போடாமல்
தாத்தா வாழ்ந்ததாக
அப்பா சொல்வார்

எப்படி என்று
கேட்கும்போதெல்லாம்
புன்னகைத்தபடியே
போய்விடுவார்

நெடு நாள் கழித்து
தாத்தாவிடம் பெற்ற பதிலை
ஒரு நாள்
தாத்தா போலவே
அப்பா சொன்னார்

அட போடா நான் அன்பால
எல்லாத்தையும் பாக்கறேன்
அதான் தெளிவாத் தெரியுது

படகும் மீனும்

படகு கேட்டது மீனிடம்
நான் உன்னைப் போல்
நீந்த வேண்டும்

மீன் சொன்னது படகிடம்
நான் உனனைப் போல்
மிதக்க வேண்டும்

பதில்கள்

நீ பதில் சொல்வது
என் கேள்விக்குப் போதுமானது

நீயே பதிலாவது
என் வாழ்க்கைக்குத் தேவையானது

Saturday, July 11, 2009

சமாதானம்

குடை எடுத்து வராத பெரியவர்
எப்போது நிற்கும் என்கிறார்

பின் நிற்பவர்களைப் பார்த்து
அவரும் ரசிக்க முயற்சித்து
அதுவாய் நிற்கும்
என்று சமாதானம்
சொல்லிக் கொள்கிறார்
நான் ஏறாத
ரயிலிலிருந்து இறங்குகிறேன்
இறங்க வேண்டிய இடத்தில்
தாத்தாவின் செருப்புகளை
நனைக்கிறது மழை
தாத்தாவைத் தேடியபடி
கொன்றுபோட்ட மலைப்பாம்பு
நெளிந்து கொண்டிருந்தது
மரணத்தின் மேல்
தொப்பி விற்பவன்
தலையில் அணிந்து சொல்கிறான்
வெயிலை
ஒரு கோடி மெளனங்களோடு
நீ விடை பெறுகிறாய்
ஒரு சொட்டுக் கண்ணீரோடு
நான் திரும்புகிறேன்

Friday, July 3, 2009

பார்வைகள்

உன் முதலிரண்டு பார்வைகளை
இப்படி எழுதலாம்
போரும் அமைதியும்

அன்பு வரைந்த புள்ளி

அன்பு வரைந்த புள்ளியில்
நீ கவிதை எடுக்கிறாய்
நான் உன்னை
எடுக்கிறேன்

Sunday, June 28, 2009

உன் பெயர்

உன் பெயர் கேட்டேன்
புன்னகைக்கிறாய்
புன்னகையா
உன் பெயர் என்றேன்
சிரிக்கிறாய்

Wednesday, June 24, 2009

ஒரு முதியவரின் டைரியிலிருந்து...

என் வயது
ஒரு இளைஞனைப் போல
எனக்கு துணையாக
வந்து கொண்டிருக்கிறது

கவிதை முழுதும்...

கவிதை முழுதும்
இறைந்து கிடக்கும் மெளனம்
நீ படித்துப் போயிருக்கிறாய்

மரணப்புகை

சிகிரெட் பிடித்தது அவனை
இடையில்
மரணப்புகை

Thursday, June 18, 2009

ரகசிய பயம்

என்னைப் பற்றிய ரகசியத்தை
என்னிடம் சொன்னால் கூட
வெளியில் கசிந்து விடுமோ என்று
பயமாக இருக்கிறது

Sunday, May 31, 2009

மூன்றாவது நபர்

ஒரே ரயிலில்
பயணித்தபடி
நீயும் நானும்
எத்தனையோ முறை
பேசி இருக்கிறோம்

நம் மெளனத்தின் போதெல்லாம்
ரயில் சத்தம்
மூன்றாவது நபராக
உரையாடலில்
கலந்து கொண்டிருக்கிறது

இப்போதும்
ரயில் வருகிறது
உன் நினைவில்
என் கனவில்

எந்த ரயிலுக்கும்
தெரியவில்லை
நம்மை
நாம் பேசியதை

ஒரே மழை

அம்மாவிடம் குழந்தைக் கேட்டாள்
அம்மா இந்த மழையும்
போன வார மழையும் ஒன்னா
சட்டென தடுமாறியத் தாய்
போய் படி என்றாள்
அம்மாவிடம் சொல்லிவிட்டு
ஓடினாள் குழந்தை
ஒரே மழைதாம்மா
அதுக்குத் தோணறப்பல்லாம்
பெய்யுது

Monday, May 18, 2009

உன் புன்னகையை
வரைந்து பார்த்தேன்
வானவில் கிடைத்தது

Monday, May 4, 2009

சொற்களின் தழும்புகள்

உன் மெளனம்
எறிந்த கற்களில்
சொற்களின் தழும்புகள்

காதல் வனம்

உன் பிரியத்தை
எழுதலாம் என்று
தாளில்
குவித்து வைத்தேன்
பூத்துக் குலுங்கியது
காதல் வனம்

Wednesday, April 29, 2009

பார்வைகள்

நீ என்னைப் பார்த்து பேசுவது
காதலைப் பார்த்துப் பேசுவது
போலிருக்கிறது
நான் உன்னைப் பார்த்துப் பேசுவது
கவிதையைப் பார்த்துப் பேசுவது
போலிருக்கிறது

Wednesday, April 22, 2009

உதடுகள்

நாம்
முத்தம் கொடுக்கும்
நெருக்கத்தில்
பேசிக்கொண்டிருக்கிறோம்
புத்திசாலி உதடுகள்
புரிந்து கொண்டால் சரி

Monday, April 20, 2009

மனச்சுவர்

உன் நினைவுகள்
வானவில்லாய்
ஒட்டடை படிந்த
மனச் சுவரில்
நம் உரையாடல் நடுவே
உரையாடிக் கொண்டிருந்தது
நம் மெளனமும்
ஒளித்து வைத்த கண்ணீர்
தூறிக் கொண்டிருக்கிறது
உன் நினைவுகளில்
விடாது பெய்யும் மழை
ஒதுங்கி நிற்கும் பெண்ணின்
கைபேசியிலும்

Friday, April 10, 2009

மெளனத்தின் ஒப்பனை

உன் உதடுகளில்
மெளனத்தின் ஒப்பனை
குரல் உயர்த்திப் பேசுகின்றன
உன் கண்கள்

குறுங்கவிதை

ஒரு குறுங்கவிதையை
சொல்லிவிட்டுப் போகின்றன
உன் கண்கள்
அதை திரும்ப
எழுதிப் பார்க்கையில்
முடிந்தபாடில்லை

நீண்ட காலம்

நீண்ட காலமாக நாம்
பேசிக் கொண்டிருந்தோம்
காலத்தில் பதிவாகும்படி
பேசவே இல்லை

Friday, April 3, 2009

அடிக்கடி நினைவுகளில்
உன்னை தொலைத்து விடுகிறேன்
வேறு சில நினைவுகளில் வந்து
நீயே சேர்ந்து கொள்கிறாய்

மீட்டெடுத்தல்

நான் எழுத
மறந்து போன கவிதையை
நீ திரும்ப சொன்னாய்
அழகாக

பின்னொரு நாளில்
மீண்டும் கேட்டபோது
அது உனக்கும்
மறந்து போயிருந்தது

ஆயுள் கெட்டியான
கவிதை எனில்
அது மறதியை
ஜெயித்து வாழும் என்றேன்

நீ சிரித்தபடியே
சொல்லிப் பார்த்தாய்
அதே கவிதையை
உனது வார்த்தைகளில்

என் மறதிக்குள்
புதைந்து போன
கவிதையின்
முதல் சொல்
ஒரு செடிபோல்
எட்டிப் பார்த்தது
பின் முழுதும் வந்தது

நம்மை மீட்டெடுத்தது கவிதையா
நாம் மீட்டெடுத்தது கவிதையா
என்று இதன் பிறகு
பேசத் தொடங்கினோம்
மழை அள்ளி விளையாடும்
குழந்தைகளைப்போல

Saturday, March 28, 2009

முகங்கள்

நீ வருவதாக
சொன்ன ரயிலில்
வந்து சேரவில்லை
எல்லோரும்
இறங்கிப் போகிறார்கள்
உன் முகத்தை
அணிந்தபடி
--------------------------------

Monday, March 9, 2009

அழகு

அழகாக இருக்கிறது
என் வார்த்தைகளுக்கிடையில்
உன் மெளனத்தை
வைத்துப் பார்ப்பது

Sunday, March 8, 2009

உனக்கு

என் மீது
உனக்கு நம்பிக்கை
வந்த பிறகு
காதலை சொல்லலாம்
என்றிருந்தேன்
காதலே ஒரு
நம்பிக்கை
என்பதை உணராமல்
தொலைந்த உன் கைக்குட்டை
கண்டுபிடித்தது
என்னை

Saturday, February 21, 2009

புன்னகையின் கோடுகள்

உன் வார்த்தைகளுக்கு
அடிக்கோடிட்டது போல்
கூடவே புன்னகையும்
நீ பேசியது
மறந்து போனாலும்
உன் புன்னகையை வைத்து
அதை என்னால்
உணர முடியும்

கை அள்ளும் நீர்

நீ கை அள்ளும்
நீரைப் போலவே
எளிமையானதுதான்
என் அன்பும்
அருந்தலாம்
இல்லை அப்படியே
விட்டு விடலாம்

Friday, February 20, 2009

வரும் சந்திப்புகளில்

இந்த சந்திப்பில்
நான் மறைத்த
பொய்களுக்கு
நீயும்
நீ மறைத்த
பொய்களுக்கு
நானும்
மன்னிப்புகளை
வழங்கிக் கொள்வோம்

வரும் சந்திப்புகளில்
நாம் பேசும்
உண்மைகள்
மற்ற பொய்களிலிருந்து
நம்மை
விடுவிக்கட்டும்

Tuesday, February 17, 2009

நன்றி

உனக்கு நான்
சொல்ல நினைத்து
சொல்லாமல் போன
நன்றிகள் எல்லாம் சேர்ந்து
மாறி இருந்தன
பூந்தோட்டமாய்
இதற்கு எப்படி
நன்றி சொல்ல

Sunday, February 15, 2009

பட்டம்

சட்டென மறைந்து போனது
குழந்தை விட்ட பட்டம்
கடற்கரை நெரிசலில்
எப்படித் தேட
குழந்தையை சமாளிக்க
அப்பா சொன்னார்
பட்டம் வானத்துக்கு
அந்த பக்கம் போயிருக்கும்
கண் துடைத்தபடி
குழந்தை கேட்டது
பட்டம் என்னத்
தேடுமாப்பா

ஒன்றுமில்லை

பேசுவதற்கு ஒன்றுமில்லை
சந்தித்தோம்
பேசிய பிறகு ஒன்றுமில்லை
பிரிந்தோம்

மணல்

முழு கடலையும்
தன் கண்களுக்குள்
சுருட்டிக்கொண்டு
ஓடுகிறாள் அவள்
நீரற்று தவிக்கிறது மணல்
என்னைப் போன்று

குழந்தையின் விமானம்

மழை அனுப்பி
பார்க்கிறது வானம்
குழந்தையின் விமானத்தை

உதிரும் நான்

பூக்காரியிடம்
பேரம் பேசிக்கொண்டிருந்தேன்
அவள் சிரித்தபடியே
என்னை உதிர்த்துக் கொண்டிருந்தாள்

Thursday, February 12, 2009

திரும்புதல்

பட்டாம் பூச்சியுடன்
தொலைந்து போன மனம்
திரும்பி வந்தது
வண்ணச் சிறகுகளுடன்

கடலில் புதைந்த கவிதை

நீங்கள்
மூழ்கி
நீர் குடைந்து
அடைந்தாலொழிய
மீட்டெடுக்க முடியாது
கடலில் புதைந்த
கவிதையை

Monday, February 9, 2009

உன்னைக் கூப்பிடுகிறேன்

மிகச்சுருக்கமாய்
என்ன பேசலாம் என்று
முடிவு செய்த பிறகு
உனனைக் கூப்பிடுகிறேன்
ஒலிக்கிறது
உன் கைபேசி
அந்த ஒலியோடு
சேர்கின்றன என்
வார்த்தைகளும்
நீ எடுக்கவில்லை
துண்டிக்கப்படுகிறது
என்றாலும்
முடிந்திருக்கிறது
என் உரையாடல்

விடுமுறையும் ஊரும்

விடுமுறைக்கு ஊர் வந்து
விடுமுறை ரத்து செய்யப்பட்டு
அவசரமாய் கிளம்பியபோது
அப்பா சொன்னார்
இதுக்கு நீ வராமயே
இருந்திருக்கலாம்
பதில் சொல்லாமல் திரும்பிய
என்னால் ஏமார்ந்திருக்கும்
ஊரும்

Thursday, February 5, 2009

கனவைப் போலவே
இருக்கிறது
கனவு காண்பதும்

Wednesday, February 4, 2009

உனக்கு...

நான் சென்று கொண்டிருப்பது
இருள் நிறைந்த பாதை
என்னிடமிருக்கிறது
உன் ஒளி நிறைந்த புன்னகை
(சுகிக்கு)

Monday, February 2, 2009

முடிவு செய்த பிறகு

போகலாம் என
முடிவு செய்த பிறகு
எல்லாமே உனக்கு
அவசரமாயிற்று

காத்திருக்கலாம் என
முடிவு செயத பிறகு
எல்லாமே எனக்கு
அவசியமாயிற்று

Thursday, January 29, 2009

புகார் புத்தகம்

புகார் புத்தகமாகி இருக்கிறது
என் நாட்குறிப்பேடு
தாள்கள் தீர்வதற்குள்
எல்லோரும்
விசாரித்து முடிக்க வேண்டும்
என்னை

Tuesday, January 27, 2009

பூனை

தன்னைக் கொன்றவன்
கனவில் வந்து
இனப்பெருக்கம் செய்கிறது பூனை

எனக்கான பாடல்

இசை படிந்த
உன் கண்களில் இருக்கிறது
எனக்கான பாடல்