Friday, December 30, 2011

முடிந்த பிறகும்

1-

காதலில்லாமல்
பேசிச் செல்வாயா
கேட்கிறாய்

மழையிடம்
நனையாமல்
அழைத்துச் செல்வாயா
என்று கேட்பது
போலிருக்கிறது

2-

எதுவுமில்லாத
என்னிடமிருந்து
எல்லாம் எப்படி
பெற்றாய் நீ

3-


மழையைப் போல்
சிரிக்கிறாய்
அன்பிம் ஈரம்

4-

உரையாடல்
முடிந்த பிறகும்
கேட்டுக்கொண்டே இருந்தது
உன் குரல்

Wednesday, December 28, 2011

இந்த வரிகள்

அடிக்கடி கார்துடைத்து
கை நீட்டாமல்
தருவதை வாங்கிப்போகும் சிறுவனை
சிக்னலில் நிற்கும் கணங்களில்
கவனித்திருக்கிறேன்

எனக்கும்
தாய் தந்தை உண்டு
எங்கிருக்கிறார்கள்
என்ன ஆனார்கள் என்று
தெரியாது

அவன் வந்துபோகும்
ஒவ்வொரு முறையும்
இந்த வரிகளும்
வந்துபோவதுண்டு

அப்பாவின் கடிதம்

வயதும் முதுமையும்
வந்து சேர்ந்த நோயும்
படுக்க வைத்துவிட்டதை
வருத்தமாய்
சொன்னதே இல்லை அப்பா

நகைச்சுவை இழையில்
எல்லோரையும்
கட்டிப்போட்டு விடுவார்

இன்று வந்த
அப்பாவின் கடிதம்
இப்படி முடிந்திருந்தது

மீண்டும் குழந்தையாகி
நடக்கப் பழகுகிறேன்

குறுஞ்செய்திகள்

1-

என்னதான்
வார்த்தைகளிலும் வரிகளிலும்
இறக்கிவைத்தாலும்
மீந்து போகவேச் செய்கின்றன
பிரியங்கள்

2-

இந்த தேநீரும்
இதற்கு முன்பு
குடித்த தேநீரும்
சுவையில் கொஞ்சம்
வித்தியாசப்படுகின்றன
உன் அடுத்தடுத்த
குறுஞ்செய்திகளைப்போல

Monday, December 26, 2011

முத்தம் மட்டும்

கை நீட்டுகிறது குழந்தை
ஒன்றுமில்லை
உள்ளங்கையில்
முத்தம் மட்டும்
வைக்கிறேன்
பெரும் சந்தோஷத்துடன்
ஓடுகிறது
உலகைக் கொண்டு
செல்வதைப் போல

Wednesday, December 21, 2011

வீடு

இடம் பெயர்ந்து வந்தாலும்
நினைவில்
குடியிருந்த வீடு

Tuesday, December 13, 2011

மேலும்

நிசப்தமான இரவை
மேலும் அமைதியாக்குகிறது
உன் நினைவு

Sunday, December 11, 2011

நடக்கிறேன்

இந்த மழையைப் போலவே
நனைக்கிறது
தூரத்திலிருந்து
வரும் பாடலும்
நடக்கிறேன்
குளிரின்றி

Saturday, December 10, 2011

உன் கனவிலிருந்து

நம் பேச்சுக்கிடையில்
வந்து போகும்
பட்டாம் பூச்சி
என் கனவிலும்
வந்தது

எங்கிருந்து
வருகிறாய் என்றேன்

உன் கனவிலிருந்து
என்றது

எனக்கென்ன
கொண்டு வந்தாய்
எனக் கேட்டேன்

கேள்வியைத் தட்டி விட்டு
கொஞ்சம்
வண்ணம் இறைத்தபடியே
ஓடிப் போனது

பூவை வரைதல்

எதுவும் பேசாமல்
ஒரு பூவை வரைந்து
என் கையில்
கொடுத்துவிட்டுப் போகிறாய்

மெல்ல அது
வாசம் வீசத்
தொடங்குகிறது

ஆச்சர்யத்துடன் பார்க்க
பூந்தோட்டமாகிறது

சுற்றி ஓடுகிறேன்
ஓய்வின்றி

தேன் ருசிக்கிறேன்
எல்லையின்றி

Saturday, December 3, 2011

வாசிப்பு

தூரத்திலிருந்து
வரும் வாசிப்பு

எப்படித்தான்
வாசிக்கும் உருவத்தை
வரைந்து பார்க்க
முயற்சித்தாலும்
அது மாறி விடுகிறது

புல்லாங்குழலாகவே

பறவைப் போல

பறவைப் போல
வந்து சென்றாய்
நீ விட்டுச் சென்ற இறகு
காட்டியது வானத்தை