Thursday, April 29, 2010

உன்னை...

உன்னை அழிப்பதும்
எழுதுவது போலவே
இருக்கிறது

Monday, April 26, 2010

தேநீர் தருணங்கள்

1-

உன் கைபக்குவம்
இந்த தேநீருக்கு இல்லை
ஆனாலும் இது உன்னை
ஞாபகப்படுத்த தவறவில்லை

2-

மழையில் ஒதுங்கி
குடிக்கும் போது
அமுதமாகி விடுகிறது தேநீர்

3-

டீ கிளாஸ் கழுவும் சிறுவன்
அருகில் இருக்கும்
பள்ளிக்கூடத்தைப் பார்த்தபடி

4-

யாருடனும் பேசாத பைத்தியக்காரன்
பேசுகிறான்
முடியும் வரை தேநீருடன்

5-

தேநீர் குடிக்கும் முதியவர்
அவர் பிஸ்கெட்டுக்காக
காத்திருக்கும் நாய்

6-

பேப்பருடன்
தேநீர் குடிப்பவர்களுக்கு உதவுகிறது
டீ ஆறிய பின்னும்
செய்திகளில் இருக்கும் சூடு

7-
நண்பர்களோடு தேநீர் உரையாடல்
அப்போது குடிக்கிறோம்
சுவையான நேரங்களையும்

8-

நீ தந்த தேநீர்
உன் அன்பின்
சுவை போலவே

9-

சிரமமாக இருக்கிறது
பிடித்தமான கடையை விட்டு
வேறு இடத்தில்
டீ குடிப்பது

Saturday, April 24, 2010

கனவில் பட்டாம்பூச்சி

கனவில் பட்டாம்பூச்சி
வைத்த பெயர் சொல்லும்போதெல்லாம்
அருகில் வந்து போகிறது
--------------
கடைசி முழப்பூ
வைத்துக் கொண்டு கிளம்புகிறாள்
பூக்காரி
--------------
விடுமுறை தினம்
கரும்பலகை எண்கள்
ஏமாற்றத்துடன் பார்க்கின்றன பெஞ்சுகளை
--------------
இந்த பேருந்திலும்
கேட்க வாய்த்தது
குழந்தையின் மழலை
--------------
செவ்வகத்தில் ஊறும் எறும்பு
போடுகிறது
வட்டங்களை
-------------
இறந்து போனவர்
வரைந்த ஓவியத்தின்
கண்களிலும் கண்ணீர்
-------------
கோயில் மணி
அடிக்கும்போதெல்லாம் திரும்புகிறது
கட்டப்பட்டிருக்கும் மாடு
--------------
நான் அடித்தபோது
உனக்கு வலித்ததா

அடித்தபோது
அவ்வளவாக வலிக்கவில்லை

கேட்டபோது
நிறையவே வலித்தது

Monday, April 19, 2010

தெரிதல்

இருந்தும் தெரிந்தது
தையல்காரர் சட்டையில்
ஒளிந்திருந்த கிழிசல்

தொலைதல்

துர்கனவில்
தொலைந்து போனேன்
நீ அங்கிருந்தாய்
நல்வரமாய்
என்னை வரவேற்க்க

Saturday, April 17, 2010

நடத்தல்

போகும் வழியில்
இறக்கி விடுகிறேன்
எப்போதும் நடக்கும்
நண்பரைக் கூப்பிட்டேன்

கால்தான் வாகனம் எனக்கு
மத்த வாகனம் எதுக்கு
புன்னகைத்தபடியே
நடந்து போனார்

சில வரிகள்

சந்தை தொலையாது
மகளும் தொலைய மாட்டாள்
தேடுகிறாள் தாய்
---------------
பேசிக்கொண்டே இருந்த பெண்
நிறுத்திய பிறகும்
பேசுவது போலவே தெரிந்தாள்
---------------
மீனே
கடல் பற்றிய
ஒரு ரகசியம் சொல்
உன்னைக் கடலில்
விட்டு விடுகிறேன்
------------
இல்லாவிட்டால் என்ன
விரல் கழுத்தில் ஊர்ந்து
உணரும் நகையை
-------------

Monday, April 12, 2010

மழை பார்வைகள்

எல்லோரும் தூங்குகிறார்கள்
குழந்தையை அழைக்கிறது
மழை
-------------
கூப்பிட்ட மேகம்
வந்து சேர்ந்தது
மழையாய்
-------------------

அன்பின் வரிகள்

1-

அன்பை குழைத்து
வரையும் புன்னகை
அழிவதே இல்லை

2-

ஒரே ஒரு முத்தத்தில்
திறந்து கொண்டது
காதல்

3-

சாந்தமாக பார்க்கிறாய்
வடிகிறது
என் கோபம்

Saturday, April 10, 2010

கேட்டல்

ஓயாமல்
கண் சிமிட்டிய
நட்சத்திரத்திடம் கேட்டேன்
நீ எப்போது
தூங்குவாய்

விழித்திருக்கும் போது
பதில் வந்தது

வேண்டுதல்

சாமிப் படங்கள்
விற்க வேண்டும்
சாமியிடம் வேண்டுகிறார்

பார்க்கவில்லை

வெகு சீக்கிரம்
மேல் பர்த்தில்
ஏறி படுத்துக் கொண்டவர்
பார்க்கவில்லை
கூடவே வந்த நிலவை

Thursday, April 8, 2010

சாத்தியம்

பறவையின் சிறகில்
ஒளிந்த கனவு
இந்த வரிக்குப் பின்
பறத்தலை
சாத்தியமாக்கியது கவிதை
கனவுடன் சேர்ந்து

Wednesday, April 7, 2010

யாரும் என்னுடன் இல்லை

1-

எண்களைப் படிக்கும் சிறுமி
இருபத்து மூன்றாவது மாடியிலிருந்து
இறங்கும் லிப்ட்

2-

யாரும் என்னுடன் இல்லை
எழுதிய வரி இருக்கிறது
என்னுடன்

3-

எப்போது படித்தாலும்
புதிதாகவே இருக்கிறது
அப்பாவின் கடிதம்

4-

தனிமையைத்
தின்கிறது
சுவர் பல்லி

5-

சவப்பெட்டி செய்கிறவன்
அதில் விழுந்து மரணிக்கின்றன
வியர்வைத் துளிகள்

6-

மணலில் பிதுங்கிய
வளையல் துண்டு
குத்துகிறது காலில்

7-

அன்புடையீர்
மன்னிக்கப் பழகிக் கொள்ளுங்கள்
என் குற்றங்களை
வெளியிடப் போகிறேன்

8-

என் மேல்
ஏறி நின்று
பார்க்க வேண்டும்
எல்லாவற்றையும்

9-

உடைந்த மீன் தொட்டி
நிதானமாக
பொறுக்குகிறார்கள்

உனக்குள்

நீ எனக்குள்
இருக்கும் வரம்
நான் உனக்குள்
இருக்கும் தவம்

Sunday, April 4, 2010

கதை

பாட்டி சொன்ன கதையில்
மழை பெய்தது
கதையில் நனைந்த குழந்தை
மழையைக் கேட்டது

அப்பா

உன்ன விட்டுகூட
இருக்க முடியும்
ஊரவிட்டுட்டு
இருக்க முடியாதுப்பா

வந்த களைப்பு வடிவதற்குள்
கிளம்பிப்போனார் அப்பா

Thursday, April 1, 2010

நினைவுகளும் மெளனங்களும்

1-

பூங்காவில் குழந்தைகள்
பெரியவர் கண்களில்
குளமிடும் பால்யம்

2-

சென்ற முறை
விழுந்த நான்
தூக்கிக் கொண்டிருந்தேன்
இந்த முறை
விழாமல் என்னை

3-

அதற்கு முன்பாக
தூக்கு கயிறை
வரைந்து பார்த்தான்
ஊர்ந்த எறும்பை
ஊதித்தள்ளிவிட்டு

4-

காலியான வீடு
நிரம்பிக் கிடக்கும்
நினைவுகளும் மெளனங்களும்

5-

வாசித்தவன் தூக்கத்தில்
புல்லாங்குழல் கேட்கும்
ரயில் சத்தம்

6-

விளையாடுகிறது
குழந்தையின் மழலையில்
நிலவு

7-

முன் ரயிலில் நிகழ்ந்திருக்கிறது
தண்டவாளத்தில்
ரத்தத்தின் வரைபடம்

தாளெங்கும்

அன்புடன் என்று
திரும்ப திரும்ப எழுதி
பேனாவை சரிபார்க்கிறான்

பேனாவை வாங்குபவள்
தன் பெயரை
எழுதி எழுதி பரிசோதிக்கிறாள்

தாளெங்கும்
அன்பும் பெயரும்