Sunday, May 29, 2011

சந்தேகம்

சந்தேகத்தை
தீர்த்துக்கொண்டவன்
சொன்னான்

புறா ரத்தம்
வெள்ளையாக இல்லை

கண்களிலிருந்து

1-

தூறல் போன வீதியில்
அழியாமல் உன்
காலடித் தடங்கள்

2-

மெளனம்
உற்றுப்பார்க்கிறது
உன் கண்களிலிருந்து

இருக்கிறது

பத்திரமாய் இருக்கிறது
என்னிடம்
நீ எடுத்துச் செல்லாத
அன்பு

Friday, May 27, 2011

பட்டாம் பூச்சி

நீ பேசும்போதெல்லாம்
உன் வார்த்தைகளில்
வந்து அமரும்
பட்டாம் பூச்சி
நான் பேசும்போதெல்லாம்
பறந்து போய்விடுகிறது

எது என்று

வானம் பார்த்து
தெரிந்துகொண்டதை
பூமி பார்த்து
புதைத்துவிட்டேன்
வளரும் வேளை
தெரிய வரலாம்
எது என்று
எனக்கும்

Friday, May 20, 2011

அம்மா

அம்மா தன் பசியால்
செய்த உணவை
எங்களுக்கு பரிமாறுகிறாள் என்று
நாங்கள் தெரிந்துகொள்ள
பல வருடங்களாயிற்று

அழைக்கும் பெண்

கண்களால்
அழைக்கும் பெண்
கண்களில் வைத்திருக்கிறாள்
நமக்கான காமத்தையும்
அவளுக்கான பசியையும்

Wednesday, May 18, 2011

நானாகிறேன்

கனவிடம் சொன்னேன்

நீ நதியாகு
நான் படகாகிறேன்

பிரியமான கனவு சொன்னது

இரண்டுமே நானாகிறேன்
நீ பார்த்து ரசி

பார்த்ததில்லை

காலை முதல்
மாலை வரை
இஸ்திரி போடுபவர்
கை நின்று
பார்த்ததில்லை

மற்ற வேளைகளில்
அவர் கால் நின்றும்
பார்த்ததில்லை

வார்த்தைகள்

எடுப்பவர்க்கு பழமாய்
மிதிப்பவர்க்கு முள்ளாய்
இறைந்துகிடக்கும்
வார்த்தைகள்

அவள்

கடவுள் திருக்கல்யாணம்
கை நீட்டி
அட்சதைப்போடுவது போல்
பாவனை செய்கிறாள்
முதிர்கன்னி

என்னையும்

விதைத்துப்போனவள்
அறுத்துப்போனாள்
என்னையும்

துருப்புச்சீட்டு

தன் கண்ணீரை
துருப்புச்சீட்டாக்கி
எல்லாவற்றையும்
பெற்றுவிடும் குழந்தை
சிரிக்கிறது
கடைசியில்