Saturday, January 29, 2011

தங்கையின் நினைவுக்கு

தங்கையின் கண்ணோரம்
கசிந்த துளியை
அண்ணன்தான்
கவனித்துப் பார்த்தார்

பின்னாளில் சொன்னார்

அந்த கண்ணீர்
தங்கையின்
வலியை
வருத்தத்தை
வாழ்க்கையை
குழந்தைகளை
எல்லாம் சொன்னதாக

தங்கைக்கு நிகழப்போகும்
மரணம் பற்றி
சொன்னதை
கடைசி வரை
சொல்லவே இல்லை

(எங்களை விட்டு மறைந்துபோன
தங்கை அமுதாவின் நினைவிற்கு)

நிகழ்வு

உன் நட்பில்
இளைப்பாறவே வந்தேன்
காதலில் பசியாறிச்
செல்கிறேன்

ஜுவாலை

உன் ஜுவாலை
எழுத்தையும்
எரிக்கிறது

எப்படி எழுத
சொல்

Wednesday, January 26, 2011

மூன்று கவிதைகள்

அம்மா கூப்பிட
ஓடியது குழந்தை
சொர்க்கத்தை நிரப்பிவிட்டு

----------

வியூகம்
அமைத்த பின்பே வேட்டை
சில நேரம்
சிக்கிவிடுகின்றன
வியூகத்திலேயே

-----------

உனக்கென்ன
இறைத்துவிட்டுப் போகிறாய்
அடுக்கிவைப்பதற்குள்
போய்விடுகிறது
என் பொழுது

-----------

Monday, January 24, 2011

நமக்குள்

நீ தொட்ட
அந்த இடம்
இதமாக இருக்கிறது என்றேன்

தொடவே இல்லை என்றாய்

நீ தொடப்போகும்
அந்த இடம்
இதமாக இருக்கும்
என்பதைதான்
அப்படிச் சொன்னேன் என்றேன்

விளையாட்டாக அடிக்கிறாய்

பின் தொடுகிறாய்
காதலையும்

எல்லைகள்

எப்போது கூப்பிட்டாலும்
தொடர்பு எல்லைக்கு
வெளியிலேயே இருக்கிறாய்

எல்லைகளற்றது காதல்
என நீ சொன்ன
வரிக்குள் நுழைந்து
தேடுகிறேன் உன்னை

வார்த்தை

அந்த வார்த்தை வேண்டுமா
என்று திரும்ப திரும்ப
யோசித்து
முடிவுக்கு வந்தேன்
கவிதையே
வேண்டாமென்று

Sunday, January 16, 2011

குழந்தைச் சித்திரங்கள்

ஒற்றைக் கொலுசு
தொலைத்துப் போனவளை
இசையாக வரைகிறது

----

இங்கிருக்கும் நீ
அங்கிருந்து
எப்படி வருவாய்

------

காலியான வீடு
வெள்ளையடிப்பவன் கண்களில்
குழந்தைச் சித்திரங்கள்

----

அரங்கத்தின் அமைதியை
வலிமையாக்குகிறது
குழந்தையின் சத்தம்

------

லாஸ் ஏஞ்ஜெல்ஸ்சில்
எங்களூர் கிராமம்
டெஸ்க்டாப்பில்

பொறுத்திருந்து

ஜன்னல்
திறக்கும் போதெல்லாம்
வந்து போகிறது
பட்டாம் பூச்சி

இப்போதெல்லாம்
மூடுவதே இல்லை
ஜன்னலை

ஒரு நாள்
விருந்தினராக
உள்ளே வரலாம்

பொறுத்திருந்து
பார்க்க வேண்டும்

Wednesday, January 12, 2011

அனுப்பி வை

நீ பார்க்க வரவேண்டும்
என்றில்லை
உன் நினைவை
கொஞ்சம் அனுப்பி வை
போதும்

Monday, January 10, 2011

ஏழு

குளிரில்
படபடக்கும் பட்டாம் பூச்சி
எதைப் போர்த்திக்கொள்ளும்

-----

எப்போது தேடினாலும்
எழுதாதப் பேனாவே
கையில் கிடைக்கிறது

------

அம்மா காட்டிய உலகத்தைதான்
படித்துக்கொண்டிருக்கிறோம்
இன்னும்

-----

சித்தப்பாவின் கடிகாரத்தைக்
கட்டிக்கொண்ட குழந்தை
மணி பார்த்துச் சொல்கிறது
உலகத்திற்கு

---

சுவர்கள் பேசுவதைக்
கேட்கும்போதெல்லாம் கூடுகிறது
அமைதியின் கனம்

---

நகரத்தை விட்டு வெளியேறியவன்
சுற்றிக்கொண்டிருந்தான்
நகரத்திலேயே

----

நீ புள்ளியான தொலைவை
கடப்பது ஒன்றும் கடினமில்லை
அதுவும்
புள்ளிப்போலத்தான்

விளிம்பில்

போதும் என்ற வார்த்தையை
பழகி வைத்திருப்பவர்கள்
தயாராகிவிடுகிறார்கள்
திருப்தியின் விளிம்பில் நின்று
போதும் என்று சொல்வதற்கு

வெளியேற்றம்

இந்தக் கவிதையிலிருந்து
நீ வெளியேறினால் என்ன
இந்த தாளில்
நீ இருந்துகொண்டே இருப்பதை
என்னால் உணர முடிகிறது

சொல்லிச் சென்ற வரி

உன்னிடம் சொல்ல ஒன்றுமில்லை
என்று நீ சொல்லிச் சென்ற வரி
சொல்லிக்கொண்டிருக்கிறது
எவ்வளவோ எனக்கு

Monday, January 3, 2011

நீ தந்த வரிகள்

படித்து
கைதட்டி சிரித்து
ரசிக்கிறாய்
உனக்குத் தெரியாது
அது உன் கண்கள் தந்த
வரிகள்தான் என்று

முகவரி

துண்டு காகிதத்தில்
நீ எழுதித் தந்த
முகவரியைத்
தொலைத்துவிட்டேன்
தேடிக்கொண்டிருக்கிறேன்
என்னையும்