Friday, April 3, 2009

மீட்டெடுத்தல்

நான் எழுத
மறந்து போன கவிதையை
நீ திரும்ப சொன்னாய்
அழகாக

பின்னொரு நாளில்
மீண்டும் கேட்டபோது
அது உனக்கும்
மறந்து போயிருந்தது

ஆயுள் கெட்டியான
கவிதை எனில்
அது மறதியை
ஜெயித்து வாழும் என்றேன்

நீ சிரித்தபடியே
சொல்லிப் பார்த்தாய்
அதே கவிதையை
உனது வார்த்தைகளில்

என் மறதிக்குள்
புதைந்து போன
கவிதையின்
முதல் சொல்
ஒரு செடிபோல்
எட்டிப் பார்த்தது
பின் முழுதும் வந்தது

நம்மை மீட்டெடுத்தது கவிதையா
நாம் மீட்டெடுத்தது கவிதையா
என்று இதன் பிறகு
பேசத் தொடங்கினோம்
மழை அள்ளி விளையாடும்
குழந்தைகளைப்போல

No comments: