skip to main |
skip to sidebar
உன் சின்னஞ்சிறு பெயரை
இசை போல்
உச்சரிக்கும் போது
அதற்கு ஒரு
வாக்கியத்தின் வசீகரம்
வந்து விடுகிறது
1-
நூல் பிடித்தது போல்
உன்னால்
பேசிவிட முடிகிறது
எனக்குத்தான்
பட்டம் போல்
அலைபாய்கிறது
2-
என் தனிமைக்கு
உன் நினைவுகள் போதும்
எனக்கு
எந்த மது போதாது
3-
போகச் சொல்கிறாய்
வழி
நீளமாகி விட்டது
4-
உனக்குத் தரப்போகும்
முத்தத்தை வெட்கத்தால்
வரைந்து பார்க்கிறேன்
5-
கால் நனைக்கும்
அலை போல
உன் மனம் நனைக்கும்
என் பிரியம்
6-
கடலை ஒரு துளியாக்கி
அதை உன் கண்ணில்
ததும்பச் செய்கிறாய்
உள் புதைந்த
மெளனம்
ஓராயிரம் கதை
வைத்திருக்கும்
அதைச் சொல்ல
சொற்கள் இல்லை
என்னிடம்
நீ என்னிலிருந்து
வெட்டி எடுக்கும்
சொற்களிலிருந்து
கசிவது
குருதியா
காதலா
நானா
சொல்