Friday, February 25, 2011

உனது அதிர்வுகள்

1-

மொழி கலப்பில்லாத
மெளனத்திலிருக்கிறது
கவிதையின் மொழி

2-

நீ தந்து சென்ற வலி
தள்ளும்போதெல்லாம்
சாய்ந்து விடுகிறேன்
உன் நினைவின் மீது

நீங்கள்

இந்த அரங்கில்
முக்கியமாக
கருதப்படும் நீங்கள்
என்னைத் தவிர்க்கவே விரும்புகிறீர்கள்

இருந்தும்
ஒரு கணம்
பார்த்துவிடுகிறீர்கள்

அதிலிருந்து மீள்வதற்குதான்
உங்களுக்கு
நிறைய கனங்கள் தேவைப்படுகிறது

கூடவே
உங்கள் எச்சரிக்கை உணர்வின் மீது
கோபமும் வருகிறது

மூதாட்டி

யார் துணையுமின்றி
கைத்தடியால் தன்னை
அழைத்தபடி
கவனமாய்த் தண்டவாளத்தைக்
கடந்து விடுகிறாள் மூதாட்டி

தொடர்ந்து செல்லும்
ரயிலிலும்
பயணிக்கிறாள்
தன்னைப் பார்த்து
கையசைத்தபடி

தகவல்

காமத்தில்
சிக்கிக்கொண்ட
காதலை
வந்தெடுக்க
உதவுவாய் என
காத்திருக்கிறேன்

போகிறாய்
சதிகாரி
தள்ளிவிட்டது
நான்தான் என்ற
தகவலைச் சொல்லி

Tuesday, February 22, 2011

இருக்கிறேன்

தனியேதான்
இருக்கிறேன்

தனிமையோடுதான்
இருக்கிறேன்

அதனாலென்ன
இருக்கிறேன்

Monday, February 21, 2011

துளிர்த்தல்

உன் வீட்டு
பால்கனியில்
துளிர்த்திருக்கிறது
என் பிரியம்

போய்ப் பார்

நீருற்று

வெறும் செடி
என நினைத்து
விட்டுவிடாதே
வெயிலில்

நிகழ்வுகள்

தாயிடம்
தொலைந்த குழந்தையை
ஒப்படைத்தேன்

சிரித்தபடியே
கையசைத்தது

திரும்ப நடந்தபோது
எதுவோ
தொலைந்தது போலிருந்தது

பிரிவு

பிரிவே
இருவருக்கும் நல்லது
இதை நீ
சந்திக்காமலேயே
சொல்லி இருக்கலாம்

குழந்தையின் மரம்

தாளில்
குழந்தை நட்டுப்போன
மரத்தை உலுக்கினேன்
பறந்தது பறவை
வண்ணம் தெளித்து

Sunday, February 13, 2011

நிலா

நீரில் விழுந்த நிலவை
எடுக்கப் பார்க்கிறது
ஆகாய நிலா

Saturday, February 12, 2011

மீதி வரிகள்

1-

தனியே அருந்தும் தேநீர்
நினைவில் வந்து
சுவையூட்டும் நண்பர்

2-

உறக்கம் போக்கும்
கனவை கைப்பற்றுங்கள்
உறக்கம் சேர்க்கும்
கனவை கைவிடுங்கள்

3-

கிடைத்த வரியில்
கிடைக்கலாம்
மீதி வரிகள்

4-

சாகும்வரை பாட்டி
மரணம் பற்றிய கதையை
சொன்னதே இல்லை

5-

பகலின் தனிமை
இரவில் விடுபடும்
கனவுகள் மூலம்

6-

உழைப்பே
உண்மையான மொழி
மற்றதெல்லாம்
தேவையற்ற எழுத்துக்கள்

கழிகிறது காலம்

எப்படி சொல்வதென்று
தெரியவில்லை
எப்படி சொல்லாமலிருப்பது
என்றும் புரியவில்லை
இரண்டுக்கும் இடையில்
கழிகிறது காலம்
துன்புறுத்தி

Friday, February 11, 2011

மிதந்த முத்தங்கள்

முத்தம் தந்து
கையை
எச்சிலாக்கிப்போனது குழந்தை
மிதந்த முத்தங்களை
எண்ணிக்கொண்டிருக்க
மீண்டும் வந்து
கூட்டியது கணக்கை

எளிய கவிதை

இந்த எளிய கவிதையை
நீங்கள் இமை
மூடித்திறப்பதற்குள்
படித்துவிடலாம்
பின் பொறுமையாய்
உணரவேண்டும்
உள் சேர்ந்திருப்பதை

Wednesday, February 9, 2011

புள்ளியில்

புள்ளியில்
தொங்கும் கவிதை
மகாகனம்

அதைப்
புள்ளித் தாங்குவது
எங்கணம்

இருள்

இருளில்
இருள் செய்த
சதுரங்கக் காய்களை
வைத்து விளையாடுகிறது
இருள்

நேரங்கள்

குழந்தை
இறைத்துவிட்டுப்போன
நேரங்களை
அள்ளி அள்ளி
ஒத்தடம் கொடுக்கிறேன்
வயதின்மேல்
கனக்கும் வலிகளுக்கு

போல

எதுவும் சொல்லாமல்
வெளியேறுகிறாய்
எல்லாம் சொல்லிவிட்டதைப் போல

எதுவும் பேசாமல்
உள்ளிருக்கிறேன்
எல்லாம் கேட்டுக்கொண்டதைப்போல

Monday, February 7, 2011

ஒரு உரையாடல்

நான் யுத்தங்களால்
ஜெயிப்பவன்

நான் வியூகங்களால்
ஜெயிப்பவன்

கால்கள்

நீ வழிப்போக்கனின்
கால்களாக இருக்கப் போகிறாயா

பந்தய வீரனின்
கால்களாக இருக்கப்போகிறாயா

கால்களிடம் கேட்டேன்

சொன்னது
கால்களாக இருக்கப் போகிறேன்