Monday, October 31, 2011

இருள் பிளந்து

கைபற்றி
ஒளிகாட்டிச் செல்லும்
மெழுகுவர்த்தியிடம் கேட்டேன்

போய் சேர்வதற்குள்
அணைந்து போவாயா

சுடரசைத்துச் சொன்னது

அதனாலென்ன

முதலில்
உன் பயம் அணை

ஒரு போதும் உருகாது
உன் சாலை
போய் சேர்
இருள் பிளந்து

Wednesday, October 26, 2011

விடவே இல்லை

அப்பாவின்
கைபிடித்து
நடக்கக் கற்றுக்கொண்ட பின்
விடவே இல்லை
வழியின்
கைபிடித்து நடக்க

மேலும்

உடைந்த கனவின்
ஒருபுறம் நீ

மேலும்
உடைத்துக்கொண்டு

மறுபுறம் நான்

மேலும்
உருவாக்கிக்கொண்டு

Tuesday, October 25, 2011

ஒவ்வொன்றும்

மழைத் துளி
விழுவது போல
உன் கவிதையின்
முதல் வார்த்தை

மழை நதியாகி
ஓடுவது போல
உன் கவிதை வரிகள்
ஒவ்வொன்றும்

Saturday, October 22, 2011

சொல்லமாட்டேன்

1-

இமைகளுக்கிடையில் நீ
பூத்திருக்கிறாய்
இதை கண்ணீர் துளி என்று
சொல்லமாட்டேன்

2-

தேநீர் அருந்தியபடியே
மழையை ரசித்தேன்
பிறகு
மழையை அருந்தியபடியே
மழையை ரசித்தேன்

3-

உனது குறுஞ்செய்தியைப்
படிக்க ஒரு சுவை
தொட்டுப் பார்க்க
பல சுவை

4-

ஒன்றுமில்லாது தொடங்கும்
இந்த கவிதை
ஒன்றுமில்லாது
முடியப் போவதில்லை

Thursday, October 20, 2011

அப்படியேதான் இருக்கிறது

1-

அப்படியேதான் இருக்கிறது
அழுக்கு
வார்த்தைகளால்
சலவை செய்யப் பார்க்கிறீர்கள்

2-

பேசிப்போனவரின் சொற்கள்
நாய்க்குட்டியைப் போல
வாஞ்சையுடன்
சுற்றி சுற்றி வருகின்றன

3-

இது போன்ற
பதில்கள் தேவையில்லை
என்றால்
இது போன்ற கேள்விகளைத்
தவிர்த்து விடுங்கள்

Tuesday, October 18, 2011

அசைத்தல்

நான் வானத்தை அசைக்கிறேன்
நட்சத்திரங்கள்
விழுகிறதா பாருங்கள்
சொன்னாள் சிறுமி

அப்போது அவள் அசைத்த
மரத்திலிருந்து விழுந்தன

சில பழங்களும்
கூடவே
நட்சத்திரங்களும்

இல்லாத பழம்

இல்லாத பழத்தை எடுத்து
ஒவ்வொரு சுளையாய் உரித்து
தின்கிறாள் சிறுமி
இருக்கும் தன் பசிக்கு

பசியை வெற்றிகொள்ள
ஒவ்வொரு முறையும்
தோற்றுப் போகாத
இந்த பாவனையை
செய்தபடி இருக்கிறாள்

அப்பா வீடு திரும்ப
இன்னும் நேரமிருக்கிறது

Sunday, October 16, 2011

ஒரே ஒரு காரணம்

என்னைத் தவிர்ப்பதற்கு
ஆயிரம் காரணங்கள்
வைத்திருக்கிறாய்
ஒரு வேண்டுகோள்
ஆயிரம் காரணங்களையும்
தவிர்ப்பதற்கு
ஒரே ஒரு காரணம்
கண்டுபிடியேன்

Tuesday, October 11, 2011

உன் மேஜையில்

உன் மேஜையில்
நீண்ட நாட்களாக
படிக்கப்படாமல்
இருக்கும் புத்தகத்தைப் போல
உன் இதயத்தில்
நீண்ட நாட்களாக
பார்க்கப்படாமல்
இருக்கிறேன் நான்

Monday, October 10, 2011

வழிப்போக்கன்

1-

மழை இறங்கும்
கனவில்
நீ போகிறாய்
நனையாமல்

2-

எங்கோ தொலைந்த
நதி
ஈரம் மறக்காத
மணல்

எங்கோ தொலைந்த
நீ
பாரம் இறக்காத
நான்

3-

உன் வழிகளில்
நடந்து கொண்டிருக்கும்
நானொரு
வழிப்போக்கன்

Wednesday, October 5, 2011

கோடுகள்

வெறும் கோடுகள் மட்டுமே
வரையத் தெரிந்தவனை
அவர்கள் ஓவியன் என்றார்கள்

பிறகு அவனை
வரையச் சொன்னார்கள்

கோடுகளுக்கிடையில்
ஓவியங்கள் இருக்கின்றன
பாருங்கள் என்றான்

அவர்கள் கோடுகளில்
தேடிக்கொண்டிருந்தார்கள்

அவன் கோடுகளில்
தாவிக் கொண்டிருந்தான்

Tuesday, October 4, 2011

வரியின் மேல்

இந்த வரியின் மேல்
பூத்திருக்கிறது பூ

முளைத்திருக்கிறது
பனித்துளி

வளர்ந்து கொண்டிருக்கிறது
கவிதை

கை பிடித்து

1-

மழலையால்
மொழியை அழைக்கிறது
குழந்தை

2-

தொலைந்த குழந்தை
மெல்ல அழுகை நிறுத்தி
நடக்கிறது
நகரத்தின்
கை பிடித்து