Wednesday, August 31, 2011

ஒரு வரி

உன் கூந்தலின்
நீளத்திற்காவது
ஒரு வரி பேசேன்

Monday, August 29, 2011

வேர்கள்

கண்ணாடியில்
மழை வேர்கள்
பூக்கிறது வானம்

Sunday, August 28, 2011

பறந்து போனவை

உனது வாசலில்
இப்போது பறந்து போனவை
பட்டாம் பூச்சிகள் அல்ல
எனது வார்த்தைகள்

Wednesday, August 24, 2011

இல்லை

நீ இல்லை
தலையணை ஓவியங்கள்
தூங்கவில்லை

Monday, August 22, 2011

பூங்கொத்து

நினைவில்
பூங்கொத்து வைத்துப்போனது
யாரென்று தெரியவில்லை

Saturday, August 20, 2011

புன்னகை

அடுத்து புன்னகைப்பாய்
என்று காத்திருக்கிறேன்
உன் முகத்தின் கடுகடுப்பை
அந்த புன்னகை
அழித்து விடலாம்

Thursday, August 18, 2011

சிறுமி

கை நீட்டும் சிறுமி
பசி மறக்கிறாள்
கார் பெண்ணின் காதில்
ஆடுவதைப் பார்த்து

Wednesday, August 17, 2011

திரவ ஆயுதம்

1-

நினைவின் வலி
கண்ணோரம் துளி

2-

வார்த்தைகளை
அடுக்கி வைத்தேன்
படியேறிப் போனது
கவிதை

3-

பல நூறு
சந்திப்புகளான பின்னும்
அணையவில்லை
ஒற்றைப் பிரிவின் நெருப்பு

4-

ஆரம்பித்தபோது
இது கண்ணீர்

இப்போது
திரவ ஆயுதம்

Monday, August 15, 2011

வரி

ஒற்றைத் துளிக்குள்
உறங்கும் கடல்

வரியைத்
தள்ளிச் சென்றது
அடங்காத அலை

Saturday, August 13, 2011

என்ன செய்ய

1-
கிளம்பும் ரயில்
நிற்பவர்களை எண்ணும்
சிறுமி
2-
அதிகாலை
பால் போடும் சிறுவன்
ரகசியமாய் பாடுகிறான்
3-
அழித்த பின்னும்
அழியவில்லை
மனதில்
4-
கண்ணீர் போல வந்த வரி
புன்னகைப் போல
பதிந்து போனது
5-
பிஞ்சு மழலையில்
தொலைந்து தொலைந்து
திரும்பும் தாய்
6-
அன்பின் நடனம்
நாயின்
வாலாட்டுதலில்
7-
பாரம் சுமந்தவன்
குரல் சுமக்கும்
துயரம்
8-
அதிகாலை கோலம்
வணக்கம் சொல்லிச்
செல்கிறேன்
9-
வயிற்றிலேயே
தாலாட்டுகிறாள்
வளரும் குழந்தையை
10-
எல்லாம் மறந்தாயிற்று
நினைவுகளில் சேர்த்து
என்ன செய்ய
11-
கரை ஒதுங்கிய பிணம்
பார்த்துப் போகின்றன
நடை பிணங்கள்

Thursday, August 11, 2011

கடவுச் சொல்

நான் திறப்பதுமில்லை
மூடுவதுமில்லை
எனக்கான
கடவுச் சொல் என்று
எதுவுமில்லை

காலங்கள்

இது இலையுதிர் காலம் என்றாள்
கையிலிருந்த இலைகளை
வருடியபடி

இல்லை வசந்த காலம் என்றேன்
அவள் கண்களிலிருந்த
பூக்களைப் பார்த்தபடி

Tuesday, August 9, 2011

ஒற்றைச் சொல்

ஒற்றைச் சொல்லோடு
முடிகிறது
நெடுங் கவிதை

படிக்க படிக்க
ஒவ்வொன்றாய் சொல்லும்
பெருங் கவிதையாய் விரிகிறது
ஒற்றைச் சொல்

மறைத்தல்

பிரிந்த போது
மறைத்துக் கொண்டோம்

உன் கண்ணீர்த் துளியை
நானும்

என் கண்ணீரை
நீயும்

Sunday, August 7, 2011

யாரேனும்

கணிப்பொறியில்
கழிகிறது காலம்
என்று தொடங்கும்
அல்லது முடியும்
கவிதையை
யாரேனும் எழுதக்கூடும்

அன்பின் மொழி

1-

குவிந்து கிடக்கும்
உன் அன்பில்
ஒளிந்து கிடக்கும் என்னை
எப்படி விடுவிக்க

2-

நீ போன பின்
நின்றது மனது
ஓடுகிறது காலம்

3-

சொட்டு சொட்டாய்
உன் அன்பு
விழக் கண்டேன்

மொட்டு மொட்டாய்
என் இதயம்
பூக்கக் கண்டேன்

4-

விரல்கள் பேசும்
குறுஞ் செய்திகளின்
மொழி

Saturday, August 6, 2011

போல

சைத்தானைப் போல
உன் நினைவுகள்
துன்புறுத்துகின்றன

கருணை மிக்க
தேவதையைப் போல
தாலாட்டவும் செய்கின்றன