Tuesday, January 12, 2010

உனக்கான வரிகள்

1-

வலிக்கச் செய்யும்
உன் எல்லா
வார்த்தைகளையும்
மருந்தாக்கிக் கொள்கிறேன்

நோயாளியாக வெளியேற
விருப்பமில்லை

2-

நீளும் இரவில்
ஓடும் கணங்களில்
உன் நினைவுகள்
பயணிக்கிறது

கண்மூடும் போதெல்லாம்
அதன் குளம்படிச் சத்தம்
எழுப்பி விடுகிறது

3-

ஆடிச்செல்லவில்லை என்று
பொய் சொல்லாதே
இதயத்தில் கிடக்கிறது
உன் ஒற்றைக் கொலுசு

4-

பின்னிரவில் வந்து
எழுப்பிவிட்டுச் சென்றாய்
உனக்குத் தெரியாது
முன்னிரவும் நான்
தூங்கவில்லை என்று

5-

மழைபற்றி
எழுதச் சொல்கிறாய்
நனைந்து முடிந்தேன்

6-

உன் புன்னகையை
முத்தமிட ஆசை
முடியுமா

7-

உன் கண்களின்
ஒற்றைத் துளியில்
அன்பின் பிரமாண்டம்

9-

உன் வீட்டில் வைத்திருக்கும்
கொலு பார்க்க
நான் வரவில்லை என்று
அம்மாவிடம்
கோபித்துக் கொண்டாயாம்

பொம்மைகளும் பொம்மைகளும்
நிறைந்த இடத்தில்
உன்னைப் பார்க்க
விரும்பவில்லை

9-

நீ படிக்கும்போது
உன்னை மிருதுவாய்
தடவிக் கொடுக்கும்
இந்த வார்த்தைகள்
நீ மறக்கும் போது
மெதுவாய்
வழிப்போக்கனைப்போல
வெளியேறிவிடும்

10-

நீ எனக்கும்
நான் உனக்கும்
சொல்லாதவை
சொல்லாதவைகளாக
இருந்துவிட்டுப்
போகட்டுமே

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

எல்லாமே கலக்கல்.