Sunday, June 20, 2010

நான் எறிந்த கல்

1-

போட்டுப் போட்டுப் பார்க்கிறாள்
காலையில் போய்விடும்
அடகுக் கடைக்கு

2-

நள்ளிரவை கீறும்
அழுகுரல்
யாரென மனம் யோசிக்கும்
விடுயென தூக்கம் கத்தரிக்கும்

3-

காரின் பாடலை
பதட்டத்துடன் அணைக்கிறேன்
ஆம்புலன்ஸ் சத்தம்

4-

நிலா காட்டி
கதை சொல்லி
சோறூட்ட
குழந்தையில்லை
கண்கள் துடைத்து
சேர்த்துபோன கதைகளைச்
சொல்லிக் கொண்டிருக்கிறாள்
அந்த நிலவுக்கு

5-

யார் எறிந்த கல்லோ
என் மேல் விழுகிறது

நான் எறிந்த கல்லும்
என் மேல் விழுகிறது

2 comments:

பா.ராஜாராம் said...

எல்லாமே நல்லாருக்கு சந்திரா.

ராஜா சந்திரசேகர் said...

நன்றி பா.ரா.