Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, April 7, 2018

ஒன்றுதான்

என் உணர்வின் தும்பிக்கையும்
யானையின்  தும்பிக்கையும்
ஒன்றுதான்
அப்போது
யானை நானாகவும்
நான் யானையாகவும்

     - ராஜா சந்திரசேகர் 

Wednesday, April 4, 2018




இன்று (04.04.2018)வந்துள்ள ஜூனியர் விகடனில்...

Monday, April 2, 2018

மிதந்து...

உன் புன்னகையைச்
சுமந்துகொண்டு
மிதந்து போகிறேன்

Tuesday, March 20, 2018

அலகில்

தன் அலகில்
மௌனம் எடுத்துவரும் பறவை 
என் உலகில் 
வைத்துவிட்டுப் போகிறது

Monday, March 19, 2018

விழும்

இமை விரிய
உள்நுழைந்த காட்சி
மனதில் விழும் 

Monday, February 26, 2018

அன்பின் நிறம்

எந்த நிறம் 
உங்களுக்குப் பிடிக்கும் 

அன்பின் நிறம்

Monday, February 12, 2018

கேள்வி/பதில்

நீங்கள் எதிர்பார்க்கும் பதில்
உங்கள் கேள்விக்கான
பதில் அல்ல

நீங்கள் வைத்திருக்கும் கேள்வி
உங்களுக்கான கேள்வி அல்ல

   

Thursday, February 8, 2018

அந்த அறையில்...

அந்த அறையில் ஒரு பியானோ இருந்தது
அதில் காலத்தின் தூசி படிந்திருந்தது
வாசிக்கத்தெரியாத ஒருவன் இருந்தான்
அவனோடு ஒரு நாய் இருந்தது
கூடவே இறந்துகொண்டிருக்கும் ஒரு முதியவள் இருந்தாள்
அவள் குளிரை தன் நடுக்கத்தால் விரட்டிக்கொண்டிருந்தாள்
அவன் பசித்த விரல் பியானோ கட்டையில் மோத
சத்தம் வருகிறது
உயிர் இருக்கிறது உயிர் இருக்கிறது என்று அவன் கூவியபடியே
முதியவளை சுற்றி வருகிறான்
நாய் குரைக்கிறது
அவள் இறந்து கொஞ்ச நேரமாகிறது

பெரிது

எதைப் பெரிதென்று 
நினைக்கிறீர்கள் 

சிறிதின் சிறிதை



Tuesday, February 6, 2018

அன்பெனும் பிரபஞ்சம்

உன் குறுஞ்செய்திகளில்
குவிந்திருப்பதை
அன்பெனும் பிரபஞ்சம்
என்ற தலைப்பில்
ஆயிரம் பக்கங்கள் எழுதலாம்

Monday, January 11, 2016

என்னவும் செய்.பிசாசே!

உன் கையைப்
பிடித்துக் கொள்ளவா!

பிடித்துக்கொண்டுதானே இருக்கிறாய்!

ஆமால்ல!
சரி இறுக்கமாகப்
பிடித்துக்கொள்ளவா!

என்னவும் செய்.பிசாசே!
அப்போதாவது
உன் வெட்கம்
வெளியேறுகிறதா..பார்க்கலாம்!

Sunday, December 13, 2015

மனதின் அழகு

நான் அப்படி ஒன்றும்
அழகில்லையே
எப்படி என்னை 
அழகாகப் படம் எடுத்தீர்கள்
அவள் கேட்டாள்

உங்கள் மனதின் அழகைப்
புன்னகையில் 
வரச் செய்தேன்
அவ்வளவுதான்
என்றார் புகைப்படக்காரர்


Wednesday, November 4, 2015

சிதறிய சொற்கள்

நீ கைக்குட்டையை
உதறிய போது
சிதறிய சொற்களை
உனக்குத் தெரியாமல்
எடுத்துக் கொண்டேன்

அவைகளை
வரிசைப்படுத்திய போது
வாக்கியமானது

வளைத்த போது
வானவில்லானது

ஊதிய போது
பறந்து போனது

கை பிசைந்து நிற்கிறேன்

கடைசி ஒன்றை
செய்யாமல்
இருந்திருக்கலாமென்று

Wednesday, October 7, 2015

காதலில் நனைந்தபடி

உன் குடையில்
நானும் வரலாமா
அவன் கேட்டான்

உன் மழையில்
நானும் நனையலாமா
அவள் கேட்டாள்

முதியவர் கையில்
குடை இருக்க
காதலில் நனைந்தபடி
இருவரும் போனார்கள்

Friday, October 2, 2015

உன் முகவரி

உன் முகவரி
கையில் இருக்கிறது
ஒரு வழிப்போக்கனைப் போல
உன் வீடுதாண்டிப் போகிறேன் 

Friday, September 11, 2015

அல்லது

காமம் காதலின் கழுத்தை
நெரித்துக் கொன்று விட்டது
என்ற வரியை எழுதியது
நானா         
அல்லது
எழுதச் சொன்னது
காமமா
காதலா

Friday, July 17, 2015

சொற்கள்

களைப்படையும்
என் கால்கள்
உன்னை சந்திக்காமல்
திரும்பி விடலாம்
என் சொற்கள்
பறந்தேனும் வந்து
உன் மடி அமரும்

Thursday, July 16, 2015

இப்போது

உன் கண்களில்
காமம் இருக்கிறது
உன் இமைகள்
அசைந்து அசைந்து
அதைக் காதலாக
மாற்றி விடுகிறது
இப்போது
உன் பார்வையில்
நான் காதலைக் காண்கிறேன்

Thursday, February 19, 2015

நீ வந்த போது

நீ வந்த போது 
நான் உறங்கிக் கொண்டிருந்தேன் 
அருகில் வந்து
மூச்சுக் காற்றால்
ஒரு குறிப்பெழுதிவிட்டுப் 
போய் விட்டாய்

Sunday, February 8, 2015

உன் வீடு

நான் வந்து சேர்ந்த 
இடத்தில் 
உன் வீடு இருந்தது 
பின் அது 
தொலைவாகிப் போனது