Monday, May 31, 2010

இசை படிந்த கோடு

1-

கடந்து வந்தபின்
திரும்பிப் பார்த்தேன்
நண்பனைப் போல்
தெரிந்தது பாலம்

2-

கூடவே வரும் வானவில்
வண்ணங்களின் கதைகளை
இறைத்தபடி

3-

சாப்பிடுவது போல்
பாவனை செய்கிறவன்
இன்னும் சோறு போட்டுக் கொள்கிறான்

4-

நள்ளிரவு குளிர்
தன் பிறந்தநாளை
நினைத்துக் கொள்ளும் காவலாளி

5-

நீர் அருந்தும் பறவை
தீர்க்கிறது
கவிதையின் தாகத்தை

6-

இசை படிந்த கோட்டின் கீழ்
இமை திறந்து பார்க்கும்
ஒலிகளும்

Thursday, May 27, 2010

அமைதியை வரைதல்

1-

ஓவியன் அறை
காலை ஒளி வரைகிறது
அமைதியை

2-

வீசும் வலையை
ரசிக்கும் மீன்கள்
பிடிபடப்போவது தெரியாமல்

3-

சிறுமி பாதம் பதிந்த மண்
வரவேண்டாம் என்கிறது
கடலை

4-

எல்லோரும் அவரவர்
நிலவைப் பார்க்கிறார்கள்
ஒரே நிலவில்

5-

தன் புல்லாங்குழலால்
மழையோடு சண்டையிட்டு
போகும் வழிப்போக்கன்

6-

இருளில் நிகழும் தாம்பத்யம்
சத்தமற்று
சத்தத்துடன்

Sunday, May 23, 2010

மூன்று கவிதைகள்

1-

நீரில் தடுமாறும் நிலா
குழம்புகிறான்
குடிகாரன்

2-

தானியம் காலருகில்
ஆகாயத்தை அலகால் கொத்தும்
கூண்டுக்கிளி

3-

என் அன்பை
நீ எடுத்துச் செல்வாயா
பத்திரமாய்

இல்லை
உன் அன்பு
என்னை அழைத்துச் செல்லும்
பத்திரமாய்

Thursday, May 20, 2010

பசியின் இசை

1-

இறந்த வண்ணத்துப்பூச்சி
தூக்கி எறிந்து
பறக்க வைக்கிறாள் குழந்தை

2-

ஊருக்குப் போனவர்கள்
பால்கனி செடி காய்கிறது
தண்ணீர் இல்லாமல்

3-

மூடுபனியை
திறக்கப் பார்க்கும் கவிதை
தோற்றபடி

4-

கை நீட்டி
பாடும் குழந்தை
பசியின் இசை

Monday, May 17, 2010

வழிகிறது

உனக்குத் தெரியாமல்
உன் புன்னகையிலிருந்த
பூவை எடுத்து
வெற்றுத் தாளில்
வைத்துப் பார்த்தேன்
நிரம்பி வழிகிறது கவிதை

Thursday, May 13, 2010

மிதந்தபடி

1-

நதியில்
மிதந்தபடி புல்லாங்குழல்
நீந்தியபடி இசை

2-

இல்லாத பாத்திரங்களையும்
நிரப்பிவிட்டுப் போகிறது
மழை

Tuesday, May 11, 2010

பனியின் பிள்ளைகள்

1-

ராணுவத்திலிருந்து
திரும்புகிறது வீர உடல்
அழும் கிராமம் பெருமையுடன்

2-

நிற்கவில்லை மழை
ரசித்தபடி அடுத்த கப்
தேநீர் குடிக்கும் மூதாட்டி

3-

மூடுபனிக்கிடையில்
நீயும் நானும்
பனியின் பிள்ளைகளைப் போல

4-

மதிய நேர பார்க்
காற்று தாலாட்ட
ஓய்வெடுக்கும் ஊஞ்சல்

5-

நனைந்து போகிறவள்
துவட்டிக் கொள்கிறாள்
தூறல்களில்

Saturday, May 8, 2010

முதல் நன்றி

மேகங்களில் நீந்தும் மழை
விழுகிறது
மீன்களாக
---

மெழுகுவர்த்தியின்
திரி நிழல்
கிறுக்குகிறது சுவரில்
---

புன்னகையுடன்
நன்றி சொல்லும்போது
முதல் நன்றியாகிறது
புன்னகை
---

சேர்ந்து போயிருக்க்கும் பசி
ஒற்றை வாழைப்பழத்தில்
தீர்த்துக்கொள்ள பார்க்கும் பைத்தியக்காரன்
---

Friday, May 7, 2010

வரைதல்

வரைந்ததைக் காட்டினாள் மகள்

அதை நீரில் நீந்தும் பறவை என்றேன்

சிரித்தபடியே மீண்டும்
வரையத் தொடங்கினாள்

எனது பறவையையும்
அவளது படகையும்

இசை

பனித்துளியில்
துளிர்விட்ட இசை
கேட்டுக் கொண்டிருந்தது
துளி மறைந்த பின்னும்

Tuesday, May 4, 2010

கூடும் பொய்கள்

கூட்டம் முடிந்து
மைக்கை கழற்றியவன் சொன்னான்

உனக்கும் எனக்கும்
பொய்யா கேட்டு
புளிச்சிப் போச்சில்ல

Sunday, May 2, 2010

வரைதல்

தூரிகையின் கனமோ
வண்ணங்களில் அடர்த்தியோ
காயப்படுத்திவிடக்கூடாது
கவனமாக வரைய வேண்டும் எறும்பை