Friday, February 26, 2010

யுத்த தர்மம்

போரில்
நீங்கள் எத்தனை பேரை
கொன்றிருப்பீர்கள்

கணக்கெதுவும் இல்லை
சுமார் ஐம்பது…அறுபது…

நல்லது
போரும் மரணங்களும்
என்ற தலைப்பில்
உங்களின் நிகழ்வுகளை
ஒவ்வொரு வாரமும்
எழுத முடியுமா

மன்னிக்கவும்
ஒருமுறை கொன்றவர்களை
மீண்டும் கொல்வதென்பது
என் யுத்த தர்மத்திற்கு
எதிரானது

யாரோ எறிந்த கல்

பறவையின் மொழியில் நானும்
என் மொழியில் பறவையும்
பேசிக் கொண்டிருந்தோம்
யாரோ எறிந்த கல்
வார்த்தைகளை
கலைக்கும் வரை

Saturday, February 20, 2010

அவளுக்கான வரிகள்

1-

அன்பின் துளி
போதும்
நீந்தி மகிழவும்
நிறைவாய்
கரையேறவும்

2-

ஒற்றை வரி
கவிதைபோல
புன்னகைக்கிறாய்
இதில் என்னால்
படிக்க முடிகிறது
நிறைய பக்கங்களை

3-

அப்போதுதான்
உன் சொற்களில்
பனித்துளிகள் ஒட்டி
இருந்ததைப் பார்த்தேன்

அதுவரை
இருந்ததற்காக
நன்றி சொன்னேன்

4-

பிறகு அவர்கள்
முத்தத்தின் குழந்தைகள்
ஆனார்கள்

Monday, February 15, 2010

அறிமுகம்

கடவுளிடம்
என் நட்பை
சொல்லிக்கொண்டிருந்தேன்
உன்னை அறிமுகப்படுத்திவிட்டு
மறைந்து போனார்

நடுநிசியில்

நடுநிசியில்
விழித்தெழும் முத்தம்
கேட்கிறது
நீ எங்கே என

குறிப்புகள்

இமை மூடிப் படிக்கிறேன்
மனதிற்குள்
நீ எழுதிவிட்டுப் போன
குறிப்புகளை

Tuesday, February 9, 2010

நதி போகிறது

நதி போகிறது
நதி போகிறது
நிற்காமல் போகிறது

நதி போகிறது
நதி போகிறது
நிற்காமல் போகிறது
என்னை நிற்கவிடாமல்

நதி போகிறது
நதி போகிறது

உனக்கானது

1-

சுமந்து சுமந்து
வலிக்கிறது
இறங்கு
கனவிலிருந்து

2-

ஒற்றை உயிர்
எத்தனைமுறை
கொல்வாய்

Sunday, February 7, 2010

வரைபடம்

1-

அன்பின் வண்ணங்களில்
உருவாகிறது
புன்னகையின் வரைபடம்

2-

புல்லாங்குழலின்
இசை கேட்டு
அசைகிறது மூங்கில்

3-

சென்ற அலை
திரும்பியது
திரும்பிய அலை
சென்றது

Tuesday, February 2, 2010

விட்டு விட்டு

அறையைத் தாழ்பாளிட்டு
தற்கொலை செய்தேன்
பின் கதவைத் திறந்து
வெளியேறினேன்
தற்கொலையை
விட்டு விட்டு

பயணத்தின் நடுவே...

1-

எந்த இசைக்குள் அடங்கும்
இந்த மழையின்
சத்தம்

2-

நண்பன் சொன்ன கவிதை
பாடல் போல் ஒலிக்கிறது
பயணத்தின் நடுவே

3-

அழுகை நிறுத்திய
குழந்தையின் கன்னத்தில்
பிஞ்சுத்துளி சிரிக்கிறது

4-

கண் விழித்த சொல்
உறங்கிக் கொண்டிருக்கலாம்
ஏதோ ஒரு
கவிதையில்