Thursday, April 29, 2010

உன்னை...

உன்னை அழிப்பதும்
எழுதுவது போலவே
இருக்கிறது

Monday, April 26, 2010

தேநீர் தருணங்கள்

1-

உன் கைபக்குவம்
இந்த தேநீருக்கு இல்லை
ஆனாலும் இது உன்னை
ஞாபகப்படுத்த தவறவில்லை

2-

மழையில் ஒதுங்கி
குடிக்கும் போது
அமுதமாகி விடுகிறது தேநீர்

3-

டீ கிளாஸ் கழுவும் சிறுவன்
அருகில் இருக்கும்
பள்ளிக்கூடத்தைப் பார்த்தபடி

4-

யாருடனும் பேசாத பைத்தியக்காரன்
பேசுகிறான்
முடியும் வரை தேநீருடன்

5-

தேநீர் குடிக்கும் முதியவர்
அவர் பிஸ்கெட்டுக்காக
காத்திருக்கும் நாய்

6-

பேப்பருடன்
தேநீர் குடிப்பவர்களுக்கு உதவுகிறது
டீ ஆறிய பின்னும்
செய்திகளில் இருக்கும் சூடு

7-
நண்பர்களோடு தேநீர் உரையாடல்
அப்போது குடிக்கிறோம்
சுவையான நேரங்களையும்

8-

நீ தந்த தேநீர்
உன் அன்பின்
சுவை போலவே

9-

சிரமமாக இருக்கிறது
பிடித்தமான கடையை விட்டு
வேறு இடத்தில்
டீ குடிப்பது

Saturday, April 24, 2010

கனவில் பட்டாம்பூச்சி

கனவில் பட்டாம்பூச்சி
வைத்த பெயர் சொல்லும்போதெல்லாம்
அருகில் வந்து போகிறது
--------------
கடைசி முழப்பூ
வைத்துக் கொண்டு கிளம்புகிறாள்
பூக்காரி
--------------
விடுமுறை தினம்
கரும்பலகை எண்கள்
ஏமாற்றத்துடன் பார்க்கின்றன பெஞ்சுகளை
--------------
இந்த பேருந்திலும்
கேட்க வாய்த்தது
குழந்தையின் மழலை
--------------
செவ்வகத்தில் ஊறும் எறும்பு
போடுகிறது
வட்டங்களை
-------------
இறந்து போனவர்
வரைந்த ஓவியத்தின்
கண்களிலும் கண்ணீர்
-------------
கோயில் மணி
அடிக்கும்போதெல்லாம் திரும்புகிறது
கட்டப்பட்டிருக்கும் மாடு
--------------
நான் அடித்தபோது
உனக்கு வலித்ததா

அடித்தபோது
அவ்வளவாக வலிக்கவில்லை

கேட்டபோது
நிறையவே வலித்தது

Monday, April 19, 2010

தெரிதல்

இருந்தும் தெரிந்தது
தையல்காரர் சட்டையில்
ஒளிந்திருந்த கிழிசல்

தொலைதல்

துர்கனவில்
தொலைந்து போனேன்
நீ அங்கிருந்தாய்
நல்வரமாய்
என்னை வரவேற்க்க

Saturday, April 17, 2010

நடத்தல்

போகும் வழியில்
இறக்கி விடுகிறேன்
எப்போதும் நடக்கும்
நண்பரைக் கூப்பிட்டேன்

கால்தான் வாகனம் எனக்கு
மத்த வாகனம் எதுக்கு
புன்னகைத்தபடியே
நடந்து போனார்

சில வரிகள்

சந்தை தொலையாது
மகளும் தொலைய மாட்டாள்
தேடுகிறாள் தாய்
---------------
பேசிக்கொண்டே இருந்த பெண்
நிறுத்திய பிறகும்
பேசுவது போலவே தெரிந்தாள்
---------------
மீனே
கடல் பற்றிய
ஒரு ரகசியம் சொல்
உன்னைக் கடலில்
விட்டு விடுகிறேன்
------------
இல்லாவிட்டால் என்ன
விரல் கழுத்தில் ஊர்ந்து
உணரும் நகையை
-------------