Saturday, January 29, 2011

தங்கையின் நினைவுக்கு

தங்கையின் கண்ணோரம்
கசிந்த துளியை
அண்ணன்தான்
கவனித்துப் பார்த்தார்

பின்னாளில் சொன்னார்

அந்த கண்ணீர்
தங்கையின்
வலியை
வருத்தத்தை
வாழ்க்கையை
குழந்தைகளை
எல்லாம் சொன்னதாக

தங்கைக்கு நிகழப்போகும்
மரணம் பற்றி
சொன்னதை
கடைசி வரை
சொல்லவே இல்லை

(எங்களை விட்டு மறைந்துபோன
தங்கை அமுதாவின் நினைவிற்கு)

நிகழ்வு

உன் நட்பில்
இளைப்பாறவே வந்தேன்
காதலில் பசியாறிச்
செல்கிறேன்

ஜுவாலை

உன் ஜுவாலை
எழுத்தையும்
எரிக்கிறது

எப்படி எழுத
சொல்

Wednesday, January 26, 2011

மூன்று கவிதைகள்

அம்மா கூப்பிட
ஓடியது குழந்தை
சொர்க்கத்தை நிரப்பிவிட்டு

----------

வியூகம்
அமைத்த பின்பே வேட்டை
சில நேரம்
சிக்கிவிடுகின்றன
வியூகத்திலேயே

-----------

உனக்கென்ன
இறைத்துவிட்டுப் போகிறாய்
அடுக்கிவைப்பதற்குள்
போய்விடுகிறது
என் பொழுது

-----------

Monday, January 24, 2011

நமக்குள்

நீ தொட்ட
அந்த இடம்
இதமாக இருக்கிறது என்றேன்

தொடவே இல்லை என்றாய்

நீ தொடப்போகும்
அந்த இடம்
இதமாக இருக்கும்
என்பதைதான்
அப்படிச் சொன்னேன் என்றேன்

விளையாட்டாக அடிக்கிறாய்

பின் தொடுகிறாய்
காதலையும்

எல்லைகள்

எப்போது கூப்பிட்டாலும்
தொடர்பு எல்லைக்கு
வெளியிலேயே இருக்கிறாய்

எல்லைகளற்றது காதல்
என நீ சொன்ன
வரிக்குள் நுழைந்து
தேடுகிறேன் உன்னை

வார்த்தை

அந்த வார்த்தை வேண்டுமா
என்று திரும்ப திரும்ப
யோசித்து
முடிவுக்கு வந்தேன்
கவிதையே
வேண்டாமென்று